தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை மெய்ம்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற் பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருளிது வெனக்கொளு முள்ளச் செம்மை யேபுரி மனத்தினார் சிவநேச ரென்பார். | 1035 | (இ-ள்.) தம்மை உள்ளவாறு அறிந்தபின் - தம்மை உள்ளபடியே அறிந்துகொண்டமையாலே அதன்பின்; சங்கரற்கு....அன்பால் - சங்கரராகிய சிவபெருமானிடத்தில் அடிமைத்திறத்தை மெய்ந்நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய அன்பினாலே; பொய்ம்மை...மனத்தினார் - பொய்யினைக் கடிந்து மெய்ப்பொருளிதுவேயாம் என்று தெளிந்துகொண்ட உள்ளத்தின்கண்ணே செம்மைநெறியினையே இடைவிடாது எண்ணிக் கொண்டொழுகும் மனத்தினை உடையவர்; சிவநேசர் என்பார் - சிவநேசர் என்று சொல்லப்படுபவர். (வி-ரை.) தம்மை...செயும் - உள்ளவாறு அறிதலாவது இறைவராகிய பதி முழுமுதல்வர் என்றும், உயிர்களாகிய பசுக்கள் எல்லாம் அவருக்கு அடிமைகள் என்றும், அடிமைசெய்து பாசங்களினீங்கி வீடுபேறடைவதே உயிர்கள் அடையும் உறுதிப் பொருளாவது என்றும், அதன்பொருட்டே மானிடப் பிறவியும் புவனபோகங்களும் தரப்பட்டன வென்றும் ஞானநூல்களுள் உரைக்கப்பட்ட உண்மைகளை ஆரவார நீர்மையிலன்றி உள்ளபடி உணர்ந்து அவ்வழியிலே ஒருகாலும் வழுவாது ஒழுகும் வகையால் அரனுக்கு அடிமை செய்கின்ற என்பதாம். சங்ககரன் - இன்பஞ் செய்பவன்; இவ்பெயராற் கூறினார், உள்ளவாறறிந்தவர்கள் யாவரும் பிறவி துன்பமுடையதென் றுணர்வார்களாதலின் அதனை நீக்கி இன்பஞ்செய்வோனை அடைவது இயல்பாமென்ற குறிப்புத் தருவதற்கு. இவ்வாறே "அளவில் செல்வத்து வளமையி னமைந்தார்...அடிமைத் திறத்தின் மிக்கவ" ராகிய முதல் வணிகர்பெருமானார் இயற்பகையாரும் "முன்கொடுக்கு மியல்பி னின்றவர்" என்றது (405) காண்க. விருப்புடன் மிக்கதோர் அன்பால் - அன்பு - அடிமைசெய்தற்கு வேண்டப்படும் இன்றியமையாத அடிப்படை; விருப்பு- அது செய்தற்கண் சேறும் மன எழுச்சி. பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது எனக்கொளும் உள்ளச் செம்மையே புரி - பொய்ம்மை -உலகப் பற்றாகிய நிலைகளின் மயக்கம்; "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்). மெய்ப்பொருள் இது - இறைவன் பற்றாகிய நிலைகளின் சார்பு. "சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்"(குறள்). இது எனக்கொளும் உள்ளச் செம்மையே புரி - முன் கூறிய துணிபை உள்ளத்தில் முடிவாகத் துணிந்துகொண்டமையால் மேற்கொண்ட சைவ நன்னெறியில் ஒழுக்கத்திலே இடைவிடாது நினைந்து நின்ற. சிவநேசர் என்பார் - "விருப்புடன்...மனத்தினார்" என்றது சிவநேர் என்ற பெயர் அவருக்குக் காரண இடுகுறியாயமைந்த நிலையை விளக்கியவாறு என்பார் - எனப்படுபவர்; படு விகுதிதொக்கு வந்தது, "இல்வாழ்வா னென்பான்" (குறள்) என்புழிப்போல. தன்மை....செய்யும் - என்றது காரணமும், "விருப்புடன்.....புரி" என்றது அதன் விளைவாகிய காரியமும் ஆம். சிவநேசர் - பெருவணிகர் தோன்றலாரின் பெயர். விருப்பினின் - நீக்கிய - என்பனவும் பாடங்கள். |
|
|