பெருகொளி ஞான முண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் மருவுமங் கலநீர் வாசக் கரகமுன் னேந்தி வார்ப்பார் தருமுறைக் கோத்தி ரத்தின் றங்குலஞ் செப்பி "யென்றன் அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க் களித்தே" னென்றார். | 1235
| (இ-ள்) பெருகொளி...தன்னில் - பெருகும் ஒளியினையுடைய பிள்ளையாரது தாமரை மலர்போன்ற கையில்; மருவும்...வார்ப்பார் - பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தினை முன் ஏந்தி அதன் மங்கல நீரினை வார்ப்பாராகி; தருமுறை...செப்பி - தரும் முறையிலே தமது கோத்திரத்திலே தமது உரிய பிரவர முதலிய குலப் பெயரினையும் எடுத்துச் சொல்லி; "என்றன்...அளித்தேன்" என்றார் - "எனது அரிய நிதியாகிய பாவைபோன்ற மகளாரைப் பிள்ளையாருக்கு அளித்தேன்" என்று (விதிப்படி மும்முறை) சொன்னார். (வி-ரை) பெருகு ஒளி ஞானம் - சிவஞானம்; "ஐந்துமா றடக்கி யுள்ளாரரும்பெருஞ் சோதி யாலும்"(780); வலிய அகவிருளாகிய மூலமலத்தையும் போக்கும் வலிமையுடைமையால் பெருகு ஒளி என்றார்; தனக்கு மேற்பட்ட ஒளியில்லாமையும் குறிப்பு. கையில் - நீர் வார்ப்பார் - அளித்தேன் - என்றார் - என்க; கன்னியைக் கொடுத்தேன் என்று சொல்லி, நீர் வார்த்து மணமகன்கையிற் கொடுத்தல் மரபு; கன்யா தத்தம் என்பது வடமொழி வழக்கு. "நீ ரெடுத்தவ னங்கையிற் பெய்தான்" (திருவிளை - விருத் - குமா - 8); "நேசமோ டளித்தே னென்னா..வாசநல் லுதக முய்த்தான்" (கந்தபு - திருக்கல் - 70). தருமுறைக் கோத்திரத்தில் தங்குலம் செப்பி - தருமுறை - வழிவழி; அந்தணர் மரபின் பரம்பரை. கோத்திரம் - மரபின் உட்பிரிவு; குலம் - கோத்திரத்தின் உட்பிரிவு; பிரவரம் என்பர். இதனுடன் சூத்திரம், வேதசாகை முதலியனவும் சொல்வர். "மற்ற வன்குடி கோத்திரஞ் சூத்திர மற்றும், முற்றறிந்து"(விருத்தகு-பட - 11). செப்பி - எல்லாருமறிய எடுத்துச் சொல்லி. என்றன் அருநிதிப் பாவையார் - மகளார்; அருநிதிப் பாவையார் - தாம் அருநிதியாகக் கொண்டு போற்றிய பாவைபோல்வார்; பாவை போல்வாரைப் பாவை என்றதுபசாரம். "பந் தணைவிரற் பாவை"(தேவா). அருநிதிப் பாவையார் - அருநிதியாகிய அணிகளை அணிந்த என்ற குறிப்புமாம்; சாலங்கிருத கன்னிகாதானம் என்பது வடமொழி வழக்கு. "தேயு நுண்ணிடைக் கன்னியைச் செம்பொனாற் புதைத்துக், காயு மாரழல் முன்னரக் காளைகைக் கொடுத்தான்" (திருவிளை. புரா - விருத்த - பட - 12). பாவையார் - இவர் பெயர் ஸ்தோத்திர பூர்ணாம்பிகை என்று திருநல்லூர்ப் பெருமணத்தில் வழங்கப்படுகின்றது. பிள்ளையார் என்றதனால் அவரது கோத்திரம் முதலிய முறையும் உணர்த்தியவாறாயிற்று. |
|
|