பாடல் எண் :3135
ஏகமாஞ் சிவமெய்ஞ் ஞான மிசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணப்பே ரல்கு னற்றவக் கொழுந்த னாரை
மாகமார் சோதி மல்க மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையு மின்னுக் கொடியென விளங்க வைத்தார்.
1237
(இ-ள்) ஏகமாம்...எய்தி - ஒன்றாகும் மெய்யாகிய சிவஞானத்தைப் பெற்ற பிள்ளையாரது வலப்பக்கத்தில் பொருந்த வந்து; நாகமார்...கொழுந்தனாரை - நாகத்தின் படம்போன்ற அல்குலையுடைய நல்ல தவத்தின் கொழுந்து போல்வாராகிய அம்மையாரை; மாகமார்...கொடியென - ஆகாயத்தின் நிறைந்த ஒளிபொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்தினுடன் பொருந்தும் மின்னற்கொடி போல; விளங்க வைத்தார் - விளங்கும்படி அமரச் செய்தார்கள்.
(வி-ரை) ஏகமாம் மெய்ச் சிவஞானம் - என்க. மெய்ச் சிவஞானம் - என்றும் மெய்யாகிய - சத்தாகிய - அழியாத - நிலைபிறழாத - சிவஞானம்; "தங்கழல் பேணும் ஒருநெறியில் வருஞானம்"(1963); "எண்ணரிய சிவஞானம்"(1966); "தாவில் தனிச் சிவஞானம்"(1967) என்று தொடக்கத்திற் கூறிவற்றை இங்கு நினைவுகூர்க. அந்த ஞானத்தின் பயன் ஈண்டு நிறைவுபெறும் நிலையாதலின் அத்தன்மையினை முடித்துக் காட்டியவாறு; இனிப், பிள்ளையார் பெற்ற ஞானத்தின் நிலைபற்றிப் பேசுகின்ற முடிந்த இடம் இதுவேயாதலும் காண்க.
ஏகமாம் மெய்ச் சிவஞானம் - ஏகம்ஆம் - என்புழி ஆம் என்னும் ஆக்கச்சொல் உண்மை குறித்து நின்றது. "நிர்க்குணனாய் நின்மலனாய்" (போதம் - 9-2 - உதா) என்புழிப்போல; "எட்படு நெய்யென வுயிருக் குயிராயெங்கும் ஏகமாம் பசுபதி தாளேந்துஞ் செய்யுள்" என்றவிடத்திற்போல ஏகமாஞ் சிவமெனவே, மாற்றாமற் சொற்கிடக்கை முறையே கொண்டு சிவனது மெய்ஞ்ஞானம் - சிவனையறிந் தனுபவித்தற்குரிய மெய்ஞ்ஞானம் - பெற்றவர் என்றுரைத்தலும் பொருந்தும்.
ஞானமிசைந்தவர் - ஞானமே திருவுருவமாகப் பெற்றவர்; ஞானம் மிசைந்தவர் என்று பிரித்துச் சிவஞானத் தின்னமுதத்தை உண்டவர் என்றலுமாம்; மிசைதல் - உண்ணுதல்.
வலப்பால் எய்தி - விளங்க வைத்தார் - என்று கூட்டுக; மண வேள்விச் சடங்கு நிறைவேறி எரிவலம் வரும்வரை மணமகள் மணமகனுக்கு வலப்பக்கத் திருக்க வைத்தலும், அதன்பின் இடப்பக்கத்து இருத்தலும் மரபு. பெண் நோன்பிருந்து தவஞ் செய்து உரிய மணமகனைப் பெறுகின்றாள் என்பது நூல்களின் உட்கிடையாதலின் வேள்வி வேட்ட பின்பே இடப்பாகம் சார்வது விதி; இடப்பாகம் பெண்மைக்குரிய பாகம்; உமையம்மையாரது தவம் முதலிய வரலாறுகளெல்லாம் இக்கருத்தை விளக்குவன; அம்மை இடப்பாகத்தில் இடங்கொண்டனர் என்பதுமிக் கருத்து; நற்றவக் கொழுந்தனார் என்ற குறிப்புமிது. "பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை யென்பார்" (171); "நங்கையென் னோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற் கென்பார்" (திருவிளை. புரா - திருமணம் - 120) முதலியவை காண்க.
நற்றவக் கொழுந்தனார் - "நற்பெரும்..பூங்கொம் பன்னார்" (3120). "பெருந்தவக் கொழுந்து" (1128) என்று அம்மையாரது தவக் குறிப்பும், அவர் போல்வார் என்ற குறிப்பும் காண்க.
வெள்ளை மேகமோ டியைந்த மின்னுக் கொடி என - வினையும் உருவும்பற்றி எழுந்த உவமை. மேகத்தில் மின்னற்கொடி இசைதல் இயற்கையாதலும் காண்க; இயைந்த மின் - "மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை" என்ற பழமொழிப்படி மின் இசைதல் மழைகாட்டுமாதலின் மேலால் ஞானோபதேச மழை பெய்தலும், முத்திப் பரபோகமாக விளைவு விளைதலும் சேரும் என்ற குறிப்பினாற் பயன்பற்றிய உவமமாதலும் கருதத் தக்கது; கார்மேகத்தினும் சூல்கொண்ட வெண்மேகம் பெரும் பயன்றரும் என்பது "ஒளிகொண் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளம்"(தேவா) என்றதனாலுமறிக. மழைபொழிந்த பின் மேகமும் மின்னும் மறைதலும் குறிப்பு.
வெள்ளை மேகம் - பிள்ளையாருக்குத் திருநீற்றுப் பொலிவு, முத்தணிகளின் வெண்மைக் கோலம், ஞானப் பிழம்பாகிய வொளி என்றவற்றால் உவமையாயிற்று.
மாகமார் சோதி - மாகம் - விண்.
விளங்க வைத்தார் - முன்னரே அமைந்திருந்த தன்மை வெளிப்பட விளங்கும்படி அமர்த்தினர்.