பாடல் எண் :3147
வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்புகா ணாத ழுந்தி
யுருவெனுந் துயரக் கூட்டி லுணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க மன்னுசேர தியினுட் புக்கார்.
1249
(இ-ள்) வருமுறை...மயங்குவார்கள் - முறையாக இடையறாது வரும் பிறவியாகிய பெரு வெள்ளத்திலே எல்லை காணாது அழுந்தி உடம்பு என்னும் துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாமல் மயங்குவார்களாகிய அம்மக்கள்; திருமணத்துடன்... சிறப்பினாலே - பிள்ளையாரது திருமணத்துடனே சேவித்துக் கொண்டு முன்னாற் செல்லப்பெற்ற சிறப்பினால்; மருவிய...புக்கார் - பொருந்திய பிறவி நீங்கும்படி நிலைபெற்ற அந்தப் பேரொளியினுள்ளே புகுந்தனர்.
(வி-ரை) வருமுறை...அழுத்தி - வருமுறை - ஒரு பிறவியிற் செய்யும் வினை மேலும் பல பிறவிகளை விளைக்க, அவற்றுட் செய்தவை மேன்மேலும் பற்பல ஆயிரம் பிறவிகளுக் கேதுவாக இவ்வாறு பரம்பரையில் முறையாக வரும். வெள்ளம் - எல்லையில்லாது வருதல் கருத்து. திருமணத்துடன் சேவித்து முன்செல்லுதலைப் புணை என்னாமையால் பிறவி வெள்ளம் என்றது ஏகதேசவுருவகம். "பெரும்பிறவிப் பவ்வத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்றொன் றின்றி"(திருவா); "இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழை யேற்கு"(திருவிசை) முதலிய திருவாக்குக்கள் காண்க. அழுந்தி - வரம்பு காணாமையின் அவ்வெள்ளத்துள்ளே ஆழ்ந்து கிடந்து. வரம்பாவது கரையேறும் சிலை; அழுந்துதலாவது அதனைப் பெரிதென மயங்குதல்.
உருவெனும் துயரக் கூட்டில் - உரு - உடம்பு; துயரக் கூடு - துன்பத்துக்கே ஏதுவாயுள்ள கூடு. கூட்டில் அடைபட்ட பறவை எவ்வாறு வெளியேறமாட்டாது தடைபட்டு அதனுள்ளே வியாபரித்து அடங்கிக் கிடக்குமோ அதுபோல் வியாபக நிலைக்குரிய உயிர் உடம்பாகிய கூட்டினுள்ளே தடையுண்டு அடங்கிக் கிடக்கும் என்பது.
உணர்வின்றி மயங்குவார்கள் - உணர்வு - நல்லுணர்வு; துன்பக் கூட்டினின்றும் விடுதி பெறவேண்டுமென்ற அறிவுணர்ச்சி. மயங்குவார்கள் - பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளுடையோர். மயக்கமாவது ஒன்றை அஃதல்லாத பிறிதொன்றாக எண்ணுதல். இம்மயக்கமானது ஈண்டுப் பஞ்சாக்கர உபதேசத்தாலும் மெஞ்ஞான தேசிகரது அருட்பார்வை முதலிய தீக்கையாலும் நீங்கப் பெற்றது என்க. "ஈனமாம் பிறவி"யின் தன்மையினை விரித்தவாறு.
திருமணத்துடன்...சிறப்பினாலே - அம்மயக்கம் நீங்கிய காரணம் கூறியபடி; சேவித்து முன்செலும் சிறப்பு - "ஏக னாகி இறைபணி நிற்க...மலமாயை தன்னொடு வல்வினை யின்றே"(போதம் - 10) என்ற ஞானநூற் கருத்து இங்கு நினைவுகூர்தற் பாலது; சேவித்து முன் செல்லும் சிறப்பு - இறை பணியேயாகும் என்க, பிள்ளையார் சிவஞான நிறைவுடைய ராகலான்.
மருவிய பிறவி நீங்க - இது பாசநீக்க முணர்த்திற்று. "பாச மொருவத், தண்ணிழ லாம்பதி விதி யெண்ணு மஞ்செழுத்தே"(போதம் - 9) என்றபடி விதிப்படி தீக்கைசெய்து உபதேசஞ் செய்யப்பெற்ற சாதனத்தாலும், முன்னைப் பக்குவ முதிர்ச்சியாலும் மூலமல வலி நீங்கப் பெற்றமையால் பிறவி நீங்கும் பயன்பெற்றனர். மருவிய பிறவி - இப்பிறவி. இவ்வுடம்பான் முகந்துகொண்ட வினைப்பயனை அனுபவிக்கநின்ற, இனி வருவதாய் எஞ்சிநின்ற, பிறவிகள் எல்லாம் தீக்கையால் ஒழிந்தன.
மன்னு சோதியினுட் புக்கார் - மன்னு சோதி - நிலைபெற்ற - அழியாத - சிவச் சோதி; இறைவரது "முழுச்சுடர்ச் சோதி" (3144).
திருமணத்துடன்...புக்கார் - முற்செய் தவத்தினாலே குருவின் அருளுபதேசம் பெறுதல் வரும்; அதனாலே அவ்வுபதேசப் பொருளாகிய மந்திரப் பொருளை எண்ணி வழிபடுதல் வரும்; அதனாலே மும்மை மலங்களும் வலி நீங்கும்; அதனாலே அயரா அன்பின் அரன் கழலின் நீங்காது நிற்கும் பேறு வரும். ஆனால், இந்நிலை யெல்லாம் இடையீடின்றி ஒருங்கே நிகழ்தற்கு முன்னைத் தவத்தினால் விளைந்த கக்குவ முதிர்ச்சியும் ஆசாரியரது அருண்ஞான ஆற்றலுமே காரணமாயின என்க.
நீங்கி - என்பதும் பாடம்.
இந்த ஆறு திருப்பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.