[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1131

இது சிவகங்கை நிலையத்தினின்றும் திருக்கானப்பேர் வழி கிழக்கில் கற்சாலைவழி 35 நாழிகையளவில் அடையத்தக்கது; மோட்டார்பஸ் வசதி உண்டு. காரைக்குடி நிலையத்தினின்று 38 நாழிகையளவிலும் அடையலாம்.
திருப்புனவாயில்
திருச்சிற்றம்பலம் பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள் போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.

(1)

பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- செஞ்சடை வெண்பிறையான் முதலியனவாகப் பல தன்மைகளாலும் போற்றப்படும் இறைவர் அம்மையுடன் விரும்பி வீற்றிருக்கும் இடம் புன்னை சூழும் புனவாயிலே.
பதிகப் பாட்டுக் குறிப்பு: -(1) விரிநூலினன் - அறிவும் ஞானமும் விரிந்து விளங்குதற்கு ஏதுவாகிய வேத சிவாகமங்களை அருளியவன்; மார்பில் பிரியும் பூணூல் பூண்டவன் என்றலுமாம்; பன்னிய - பலவாறும் எடுத்துச் சொல்லிய; தாம் பன்னிய - தம்மைப் பன்னிய என இருவகையும் கொள்ள நின்றது; போய்.....அமரும் - பலவூர்கள் திரிந்து பின் தமது பழம்பதியாகிய இங்கு அமரும் என்ற குறிப்பும்பட நின்றது; 2-வது பாட்டும் பார்க்க. புன்னைகள் - நெய்தற் கருப்பொருள். புன்னை - இங்குத் தலமரமாதலும் காண்க; -(2) விண்டவர் - பகைவர்; கண்டல் - தாழை; - (3) பாரிடம் - பூதகணம்; -(5) மதமத்தம் - ஊமத்தை; மெலிதரு - சாபத்தால் கலை குறைந்தடைந்த;- (6) கனல் வாயது - வடித்த கூரிய வாயினை உடையது; எரியுமிழ்வதுபோல் அழிக்கும் என்றலுமாம்; சீருறு செல்வம் - அழியாச் சிறப்பும் ஆனந்தமுமுடைய முத்தித் திரு; சிவலோகன் என்ற குறிப்புமிது; -(7) பொருந்தலர் - பகைவர்; பொருந்தாதவர்; அடையாதவர்; - திருவளர் தாமரை - "திருவளர் தாமரை"(திருக்கோவை - 1); "திருவமர் தாமரை"(திருவிருத்தம் - நல்லூர் - 10); நரல் - சத்திக்கின்ற; சங்குகள் இயல்பாகிய நாதந் தரும் தன்மை குறித்தது; -(10) போதி....எனப் பெயராயினார் - புத்தர்; பெயர்க்காரணம் குறித்தது; வேதன் - வேதங்களைச் சொன்னவன்; வேதங்களாற் சொல்லப்பட்டவன்; உயிர்களின் மலத்தை வேதிப்பவன்என்ற குறிப்புமாம்; வினைவீடும் என்ற குறிப்புமிது; -(11) கற்றவர் - மனமிறக்கக் கற்றவர். "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை"(திருவிசை); தம்மை மறந்து அரனை நினைக்கக் கற்றவர்; அற்றமில் - குற்றங்களை இல்லையாகச் செய்யும். தமிழாகிய பாடல் என இயையும்.
தலவிசேடம் :- திருப்புனவாயில் - பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதிகள் பதினான்கனுள் ஏழாவது தலம். பழம்பதி - (விருத்தபுரி) என வழங்கப்படும் பெருமையுடையது. நம்பிகள் தேவாரத்துள் "பத்தர்தாம் பலர் பாடிநின் றாடும் பழம்பதி"