[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1243

திருவோத்தூர்
திருச்சிற்றம்பலம்

பண் - பழந்தக்க ராகம் - 1-ம் திருமுறை

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
யேத்தா தாரிலை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.

(1)

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

(7)

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- "அடியேன் இறைவர்க்காக ஆக்கும் பனைகளானவெல்லாம் காயாதாகக் கண்டு அமணர் இழித்துரைத்தார்; "அருள வேண்டும்" என்ற இரந்த அடியவர்க்காக அவர் கருத்து முற்றும்படி "அருள் நல்குமே" என இரந்து போற்றியது (2878 - 2879).
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பூத்தேர்ந்தாயன கொண்டு - உரிய நல்ல பூக்களைத் தேர்ந்து காலமிடங்களுக்கும் விதிக்கும் பொருந்தும்படி பெறலாயினவற்றைக் கொண்டு; ஏத்தாதாரிலை எண்ணுங்கால் - அவ்வவர் பக்குவத்துக்கேற்றவாறு திருவடியைப் போற்றாதவர்களில்லை என்னும் இவ்வுண்மை சிந்தித்து ஆராய்வோர்க்குப் புலப்படும். மேல் "ஓதாதா ருளரோ?" (7) என்றதுமிக் கருத்து. ஏத்தாதாரில்லை ஆதலின் அது கண்டு நானும் ஏத்துகின்றேன் என்பது குறிப்பு. "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையா தொருபோது மிருந்தறியேன்"(திருவதிகை - 2) என்ற அரசுகளது திருவாக்கும் அத் திருப்பாட்டுக் குறிப்பும் (மிமிமி - பக்கம் 87) பார்க்க. "நின்வயின் மறைத்தோ யல்லை; யுன்னை, மாயாய் மன்னினை நீயே வாழி, .......நண்ணியுமிடையொன்றின் மறைந்தோ யல்லை, யிடையிட்டு நின்னை மறைப் பதுமில்லை, மறைப்பினு மதுவு நீயே யாகி நின்றதோர் நிலையே, .....மனமருண்டு, புன்மையி னினைத்துப் புலன்வழி படரினு, நின்வயி னினைந்தே மாகுத னின்வயி, னினைக்குமா நினைக்கப் பெறுத லனைத்தொன்று, நீயே யருளுதல் வேண்டும்" (கோயினான்மணிமாலை - 32) என்ற பட்டினத்தடிகளது திருவாக்கு ஈண்டுச் சிந்திக்கத் தக்கது; உம்ம குணங்களே - இவ்வாறு யாவையும் உட்பட நிற்றல் உம்முடைய அருட்டன்மைகளாம்; குணங்களை ஏத்தா தாரில்லை என்க; கூத்தீர் - ஐந்தொழி லருட்கூத்தினை உடையீர்;- (2) இடையீர் போக இளமுலை - "ஈர்க்கிடை போகா விளமுலை மாதர்" (திருவா - போற்றித் திருவகவல் - 34); ஓர் புடை - ஒருபாகம்; இளமுலையாள் - இத்தலத்தின் அம்மை பெயர்;- (3) உள்வேர்......கொள்வீர் - வேர் நிலத்தின்கீழ் உள்ளே சென்று நுண்ணிதாய் வேண்டும் பொருள் கொள்வது போல உண்ணின்று அறிவீர்; உள்வேர் - உட்