|
| வலமாகச் சூழ்ந்து வந்து; இறைவர் திருமுன்பெய்தி...வீழ்ந்தெழுவார் - இறைவரது திருமுன்னர்ச் சார்ந்து தொழுது தலையின்மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடனே துதித்து நிலமுற விழுந்து வணங்கி எழுவாராகி; கும்பிட்ட பயன்...வீழ்ந்தார் - அவ்வாறு இறைவரைக் கும்பிட்டதனாலாய பயனே இது எனக் காண்பவர்போல மெய்ம்மையாகிய வேடர்பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவரது திருவடிகளில் வீழ்ந்தருளினார். |
| (வி-ரை) தாழ்ந்தெழுந்து...வீழ்ந்தெழுவார் - இது திருமலையை ஏறி இறைவரை வணங்கும் நிலையினைக் கூறியவகையால் வழிபாட்டு முறையினையும் உணர்த்தி நின்றது. |
| தாழ்ந்தெழுந்து - எழுந்து - என்றதனால் நிலமுற வீழ்ந்தமை குறிக்கப்பபட்டது. |
| திருமலையை - திருமலை - என அடைமொழியின்றிக் கூறியது இது திருக்கயிலை என்று குறிப்பிப்பது; "திருமலைச் சருக்கம்". |
| தொழுதுகொண்டே - ஏறி - "காளத்தி கண்டுகொண்டு" (749) என்றது காண்க. தொழுதபடியே ஏறுதலாவது மலையினில் இறைவரை நினைந்தபடியே ஏறிச் செல்லுதல். அம்மையார் கயிலைத் திருமலையின்மேலே தலையினால் நடந்தேறிய வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. மரபு காட்டி உலகரை வழிப்படுத்தும் நிலையில் பிள்ளையார் ஏறிச் சென்றருளினர். |
| சிலாதல சோபானம் - மலையினை ஏறும் படிகளின் வழி. இதனை முன்னர்ப் "பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம்" (752) என்றது காண்க. சோபானம் - படிவழி. |
| வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள்வரயில் - இறைவரது திருமலையில் கோயில் வாயிலிற் காத்துக் கிடத்தலால் இமையோர் வாழ்ந்தனர் என்றது இமையவர்கள் பலரும் தத்தமது பதங்களையும் அமரலோக போகங்களையும் வேண்டிப் புண்ணிய வேள்விகளைச் செய்து அவ்வப் பதங்களை அனுபவிப்புழி நேர்ந்த துன்பங்கள் நீக்கக் கயிலையை யடைந்து இறைவரது முன்கடைத் திருவாயில் காத்துப் பன்னாள் வரங்கிடந்து அவ்விடையூறுகள் நீங்கப்பெற்றனர் என்பது கந்தபுராண முதலிய மாபுராணங்களால் அறியக்கிடக்கும் உண்மை. "வாய்தல் பற்றித் துன்றிநின் றார்தொல்லை வானவரீட்டம்" (திருவிருத்) முதலிய மறைத் திருவாக்குக்கள் காண்க. வாழ்ந்து - நெருங்கு - வாயில் - நல்வாழ்விழந்த தத்தமது உலகங்களினின்றும் வந்து இங்கு நெருங்கி வாழ்வினைப் பெற்று என்பதாம்; நெருங்கு - வாயில் - நந்திபெருமான் உத்தரவின்றி உட்செல்ல மாட்டாதவராகி வாயிலின் நெருங்கினர் என்பதும் குறிப்பு. இவர்கள் புறத்தே நிற்பத் தொண்டர்கள் எப்போதும் வணங்கவும், தொண்டு செய்யவும், உட்புகும் உரிமையுடையோர் என்பது உள்புகுந்து என்பதனாற் பெறப்படும். "தொண்டர்கள்பின் னும்பார்குழா மல்குதிருக் காளத்தி மாமலை" (1608) என முன்னரும் இக்குறிப்புப்படக் கூறியது காண்க. |
| வளர்பொற் கோயில் - திருமாளிகை என்பர்; சூழ்ந்து - கோயிலின் திருமதிலின் உள்ளே வலமாக மாளிகையைச் சுற்றி. |
| வீழ்ந்தெழுவார் - வீழ்ந்தார் - இறைவரது திருமுன் வணங்கி எழும் வழிபாடு கண்ணப்பர் திருமுன்பு முற்றுப்பெற்றது என்பது குறிக்கத், திருமுன்பு வீழ்ந்தெழுவாராகி என முற்றெச்சமாக வைத்து, அவ்வினையெச்சம் வேடர்பெருமான் முன்பு வீழ்ந்தார் என்ற வினைமுற்றுப் பெற வைத்தோதினார். இறைவரது வழிபாடு அடியார் வணக் |