1344திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

முகிழ்க்கும் முலையினையும் உடைய திருமகளாருடன் எல்லையில்லாது நிரம்பிய செல்வத்தின் வளங்களையும்; மறையவர்.....மகிழ்ந்தார் - வேதியர்களது சீகாழிப் பதியில் அவதரித்த செல்வராகிய பிள்ளையாரே உடையவர் என்று துணிந்துகொண்ட சிந்தையினாலே மகிழ்ச்சியடைந்தனர்.
(வி-ரை) எல்லையில்......இயம்பி - இப்பரிசு - முன் பாட்டிற் கூறியவாறு. பெருங் களிப்பினால் இப்பரிசு - இயம்பி - பெருங் களிப்பினாற் கவரப்பெற்றாலன்றி இவ்வாறியம்புதல் கூடாது என்பது; என்னை? "உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக்கெடும்" என்றபடி மீக்கூர்ந்த மகிழ்ச்சியும் மீக்கூர்ந்த சினம்போலவே உள்ளத்தின் நிறையினைக் கவர்ந்து மேலெழுந்து இது தக்கது - இது தகாதது - இஃதியல்வது - இஃதியலாதது என்று நிறுத்தெண்ணுந் திறனை அழிக்கும்; ஈண்டுச் சிவநேசர் தமது மரபும் - தரமும் - பக்குவமும் - நியதியும், பிறவும் ஆகிய நிலைகள்பற்றிப் பிள்ளையார் இதனை ஏற்றருளுதற்கொண்ணுமோ என்பனவற்றை ஆய்ந்த சீர்தூக்கி நிறுத்து முடித்தாரல்லர் என்பது பின்னர் வரலாற்று விளைவிற் கண்டுகொள்க. அதனியல்பு கூறியவாறு. மேல் "அன்ப ரின்புறு மார்வத்தி னளித்தபாங் கல்லாற்...புகலிகா வலர்க்கிது புணரா, தென்பதுட் கொண்ட பான்மை" (2954) என்று இந்தியதியினை விளக்குதல் காண்க.
முல்லை....முலையார் - பூம்பாவையார்; முல்லை - முல்லையரும்பு குறித்தது; ஆகுபெயர்; நகை - ஆகுபெயராய்ப் பல்(வரிசையைக்)லைக் குறித்தது. முகிழ் முலை - முகிழ்த்தல் - தோன்றுதல்; கோங்கரும்புகளை உவமித்தல் மரபாதலின் அதுபற்றி முகிழ் - என்றார். முலைமுகிழ்த்தல் ஈண்டுப் பாவையாரது பருவங் குறித்தது; பற்களைக் குறித்ததும் அப்பருவங் குறிக்குமென்பர் மருத்துவ நூலோர்.
முலையாருடன் - வளமையும் - உடையார் - என்று முடிக்க. உடையார் - தமதாக் கொள்ளும் உரிமையாளர்.
சிந்தையால் மகிழ்ந்தார் - சிந்தை - சிந்திக்கப்பெற்ற நிலை. அவ்வெண்ணத்தையே பின்னர்ப் பலமுறையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மொழிந்தமையே யன்றி எண்ணங்களே மகிழ்ச்சியை விளைவித்தன. ஒரோவழித் தோன்றி மறையும் மனநிலைகள் போலாது, நிலைத்த இம்மனநிலையின் தொடர்ச்சி குறித்தது. இதனால் இவை எண்ணிய பாங்கே யமைந்தனவன்றிப் பின்னர் நிகழ்ச்சியின் முற்றிப் பொருந்துமாறு கண்டு மகிழும் பேறுபெறுவாரலர் என்று குறித்தமையும் காண்க. (சிந்தையால் - எண்ணிய அளவினால்.)
வண்மையும் - என்பதும் பாடம்.

1054

2953
ஆறு நாள்களி லணங்கனார் கன்னிமா டத்தின்
பாற்ற டம்பொழின் மருங்கினிற் பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய ருடன்புறம் போந்து
கோற்றொ டித்தளிர்க் கையினால் முகைமலர் கொய்ய,

1055

2954
"அன்ப ரின்புறு மார்வத்தி னளித்தபாங் கல்லாற்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா வலர்க்கிது புணரா"
தென்ப துட்கொண்ட பான்மையோ ரெயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர் முள்ளெயிற் றரவம்,

1056

2955
மௌவன் மாதவிப் பந்தரின் மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு தினின்மலர்ச் செங்கை