|
| திருந்து மனம் - முன்னைத் தவத்தாற் றிருந்திய மனம்; சரிதைகள் பரவி நிற்றலால் திருந்தும் என்றலுமாம். |
| திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப்புச் சாத்தி - "அண்ணல் சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்" என்ற பதிகப் (11) பகுதியின் குறிப்புரைத்தவாறு. வண்ணங்கண் டதிசயித்து, "இவர் காடரங்காகக் கனலெரி யாடுவர்", "ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையார்" என்பனவாதியாக அவரது அடிநிழல் பரவி நின்றேத்து மன்புடை யடியவர்க் கெளியருமாகும் தன்மைகளை எல்லாம் அவ்வண்ணத்தினுள்ளே கண்டு கண்டு மனங் கரைந்துருகிப் பதிக நிறைவாக்கி யருளினர் என்பதாம். |
| பெருந் தனிவாழ்வினைப் பெறுதலாவது அவ்வாறு வண்ணங் கண்டு சரிதைகள் பரவிநின்று மனங் கரைந்துருகப்பெற்ற நிலையில் சிவானந்தப் பெருவாழ்விலே திளைத்து அதுவே மயமாக நிற்றல். |
| பேருலகின் பேறானார் - பிள்ளையார் தாம் எஞ்ஞான்றும் அவ்வாழ்விலே நிற்பவராயினும் இவ்வுலகின் வந்து இவ்வாறு பதிகள்தோறும் சென்று சென்று திளைத்துருகி நிற்றல் உலகத்தார் கண்டுய்யும் பேறாகும் என்பது; பேருலகு - இப்பேறு பெரும் நிலையில் வந்த உலகு. |
| கரைந்துருகி - திருப்பதிகத்தலர்மாலை - என்பனவும் பாடங்கள். |
| 1128 |
3027 | நிறைந்தாரா வேட்கையினா னின்றிறைஞ்சிப் புறம்போந்தங் குறைந்தருளிப் பணிகின்றா ருமைபாக ரருள்பெற்றுச் சிறந்ததிருத் தொண்டருட னெழுந்தருளிச், செந்துருத்தி அறைந்தளிகள் பயில்சாரற் றிருக்கழுக்குன் றினையணைந்தார். | |
| 1129 |
| (இ-ள்) நிறைந்து ஆரா...பணிகின்றார் - சிவானந்தப் பெருவாழ்வினால் நிறைந்து அடங்காத பெரு விருப்பத்தினாலே நெடுநேரம் நின்று வணங்கிப் புறத்துப் போந்தருளி அப்பதியில் தங்கியருளிப் பணிகின்ற பிள்ளையார்; உமைபாக ரருள்பெற்று....எழுந்தருளி - உமையம்மையாரை ஒருபாகத்துடைய இறைவரது திருவருள்விடை பெற்றுக் கொண்டு சிறப்புடைய திருத்தொண்டர்களுடனே எழுந்தருளிச் சென்று; செந்துருத்தி... அணைந்தார் - செந்துருத்தி என்னும் பண்ணைப் பாடி வண்டுகள் பயில்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தினை அணைந்தருளினார். |
| (வி-ரை) நிறைந்து - முன் கூறியபடி தாம் பெற்ற சிவானந்தப் பெருவாழ்வினால் நிறைவு பெற்றமையினால். |
| ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி - ஆர்தல் - நிறைவுறுதலினால் அடங்குதல். இங்கு ஆரா என்பது அளவில்லாது பெருகுதலினால் அடங்காதஎன்ற பொருள் தந்தது. திருக்கடைக்காப்புச் சாத்திப் பதிக நிறைவாக்கிய பின்னும் நெடுநேரம் நின்று இறைஞ்சுதலின் காரணம் கூறியபடி. |
| நின்றிறைஞ்சி - இறைவரது திருமேனி வண்ணத்தைக் கண்டுகொண்டு அதனில் ஈடுபட்டு நின்று என்க. "சரிதைகள் பரவிநின்று உருகுசம் பந்தன்" (11) என்ற பதிகம் இதற்கு அகச்சான்றாகும். |
| அங்கு உறைந்தருளிப் பணிகின்றார் - பலநாள் அங்குத் தங்கிப் பணிவதனை மேற்கொண்ட பிள்ளையார். அருள் பெற்று - விடைபெற்று. |