| |
| மன்னிய...சிவிகை நின்றும் - மன்னிய - இதுவரையும் பிள்ளையார் அச்சிவிகையில் ஊர்ந்து செல்ல நிலைபெற்றிருந்து இப்போது அதினின்றும் நீங்கிப் பாவாடைமீது எழுந்தருளிப்போந்து, இனி இறைவரைச் சார்ந்தருளுவதனால் மேல் அதனை ஊர்வதில்லை யாகும் என்ற குறிப்புப்பட மன்னிய என்று இறந்தகாலத்தாற் கூறினார். முன் இழிந்தருளி என்ற சொல்லாற்றற் குறிப்பும் அது. |
| பன்மலர்...பாவாடை மீது - வந்தார் - பாவாடை - பாவுதல் - ஒழுங்குபெறப் பரப்புதல்; பாவிய - பரப்பிய - ஆடை; சிறப்புக்களிற் பெரியோர்கள் நிலத்தில் நடக்காது பாவாடைமீது நடந்து வரும்படி ஆடை பரப்பி அமைத்தல் மரபு; இஃது இந்நாளிலும் காணலாம். இங்குப் பாவாடைமீது மலரும் நறுந் துகளும் இட்டுவைத்தது மேலும் சிறப்புச் செய்ததன்றிப் பிள்ளையாரது திருவடிகளில் நிலத்தின் வன்மை உறுத்தாதபடி செய்யுமுறையும், வழிபாட்டு முறையுமாம். |
| முன் இழிந்தீருளி வந்தார் - பாவாடைமீது முன் இறங்கி எழுந்தருளி வந்தனர். |
| மூவுலகுய்ய வந்தார் - வந்தார் - வந்தவராகிய பிள்ளையார்; வினைப்பெயர். பிற்சரித விளைவு நோக்கி இக்குறிப்புற வைத்தது தெய்வக் கவிநலம். இரண்டும் வினைமுற்றாகக் கொண்டு எழுவாய் வருவித்துரைத்தலுமாம். |
| 1226 |
3125 | மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளி ரெல்லாம் நிறைத்தநீர்ப் பொற்கு டங்க ணிரைமணி விளக்குத் தூபம் நறைக்குல மலர்சூழ் மாலை நறுஞ்சுடர் முளைப்பொற் பாண்டில் உறைப்பொலி கலவை யேந்தி உடனெதி ரேற்று நின்றார். | |
| 1227 |
| (இ-ள்) மறைக்குல...எல்லாம் - மறையவர் குலத்னிராய் இல்வாழ்க்கை நிலையின் வாழும் மங்கலம் பொருந்திய பெண்கள் எல்லாம்; நிறைத்த நீர்...ஏந்தி - நிறைத்த நீரினையுடைய பொற்குடங்களையும், வரிசையாகிய அழகிய விளக்களையும், தூபங்களையும், தேன் பொருந்திய நல்ல மலர்களாலான மாலைகளையும், நல்ல ஒளி பொருந்திய முளைப் பாலிகைகளை வைத்த பொற்றட்டுகளையும், உறைத்தலினால் அழகு பொருந்திய கலவைச் சாந்தினையும் ஏந்திக் கொண்டு; உடன்...நின்றார் - ஒருங்குடனாக மணமகனாராகிய பிள்ளையாரை நல்வர வெதிர்கொண்டு நின்றார்கள். |
| (வி-ரை) மங்கல மகளிர் எல்லாம் - ஏந்தி - உடன் எதிர் ஏற்று நின்றார் - என்க. இது சுமங்கலிகளான மறையோர் மகளிர் மணமகனாரை மணமனையில் எதிர் வரவேற்ற நிலை கூறியது; மறைக்குல மைந்தர்களும் மறையவரும் மனையின் முன்பு பந்தரின் முன் சென்று வரவேற்ற நிலை முன் 3122-ல் கூறப்பட்டது. அதன்பின் பூம்பந்தரிற் சார்ந்து பாவாடைமீது மணமனையில் வந்தபோது மங்கல மகளிர் நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களை ஏந்தி வரவேற்பது மரபு வழக்குமாம். |
| நிறை குடம் - விளக்கு - தூபம் - மலர்மாலை - முளைப் பாண்டில் - கலவை - இவற்றைப் பெண்கள் ஏந்தி வருதல் வழக்கு; இவை மங்கலப் பொருள்கள். |
| நறைக்குல மலர்சூழ் மாலை - நறை - தேன்; குலமலர் - நல்லவகை மலர்கள்; சாதி - மல்லிகை - முல்லை முதலியன. சூழ்மாலை - மலர்களைச் சுற்றி வைத்துக் கட்டிய இண்டை பிணையல் முதலிய மாலைகள். |
| நறுஞ்சுடர் முளைப் பொற்பாண்டில் - சுடர்முளை - முளைப் பாலிகைகள்; மணத்திருநாளுக்கு முன் ஏழாநாளில் முளை பூரித்தாராதலின் (3071) முளைகள் வளம்பெற வோங்கி வளர்ந்து விளங்கின; இவற்றின் வளமும் விளக்கமும் நற்குறிகளாக எண் |