| |
| இனி, அதன் பலனாக முத்திப்பேறும் ஆவதாம். ஆதலான் முன்னைத் தவத்தின் நன்மை நந்தும் என்றார். முன்னைப் பெருந்தவத்தா னன்றி இவை நிகழா ஆதலின் "முன் செய் மாதவம்" என்றார்; நன்மை - நற்பயன். |
| பொற்பாதம் - நம்பி - விளக்கி என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| கந்தவார் குழலினார் - நம்பாண்டார் நம்பிகளது மனைவியார். கந்தம் - உத்தம சாதிப் பெண்களின் கூந்தல் இயல்பாகவே நன்மணமுடைய தென்பவாதலின் இன்ன மணம் என்னாது வாளா கந்தவார் குழல் என்றார்; இவ்வாறு பொதுப்படக் கூறினும் இங்கு நீர் வார்த்து மணமகனார் பாதத்தை விளக்கும் உரிமையுடையவர் மனைவியாரே யாதலின் அதுபற்றி அவ்வா றுரைக்கப்பட்டது. |
| புந்தியால்...உன்னி - இச்சடங்குக்குரிய பாவனை கூறப்பட்டது. மணமகளைச் சிவனாகப் பாவித்து மணச் சடங்குகள் செய்தல் வேண்டுமென்பது விதி. தியானம் - அழுந்தியறிதல்; தியானத்தின்கண் - உன்னி என்று கூட்டுக. |
| பொற்கரக நீர் - பொன்னாலாகிய கமண்டல நீர்; கரகம் - மூக்குடைய சிறு பாத்திரம்; சிறு தாரையாக இடையறாது விழும்படி அமைக்கப்படுவது. |
| குழலினார் நீர் வார்ப்ப - மணமகன் பாதத்தைப் பால்கொண்டு நீர் வார்த்து விளக்குதல் மணமகளைப் பெற்ற தாயார் செய்வது மரபு. ஈண்டு மணமகனார் என்றதனோடு அமையாது வழிபடு குருவாகவும் கொண்டமையால் நம்பாண்டார் மனைவியார் கரகநீர் வார்க்க இச்சடங்கினைத் தாமே செய்தனர். "எம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்; வம்மின்"(3065) என முன்கூறியது காண்க. |
| உன்னி - விளக்கி - பூரித்தார்; தெளித்தனர் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| 1233 |
| 3132. (வி-ரை) மிக்க புனித நீர் - ஞானபோனக ராதலின் பிள்ளையாரது பாதம் விளக்கிய நீர் மிகுந்த தூய்மையுடையது என்பதாம். அந்த நீர் என்க. |
| தலைமேற் கொண்டு - தலையின்மேற் றெளித்துக் கொண்டு; உயிர் வாழும் மாடமாகிய உடலின் உத்தமாங்கமாகிய மாடத்தின் உள்ளும் புறம்பும் தெளித்தனர். |
| உருப்பொலி...பூரித்தார் - உடலின்மேற் றெளித்தல் முன் கூறினார்; மாடத்தின் உள்ளே தெளித்தல்போல் உடலின் உள்ளே நிறைத்தல் ஈண்டுக் கூறுகின்றார். பூரித்தல் - நிறைத்தல்; உருப் பொலிதல் - அழகுடைத்தாதல். உதரத்தககு அழகாவது தூய பண்டங்களால் நிறைவாதல். |
| உவகை பொங்கி - பிள்ளையாரது திருப்பாதம் விளக்கிய தூயநீரினைப் பெற்ற பேற்றினைக் கருதி மிக மகிழ்ந்தனர்; உவகை பொங்கித் - தெளித்தனர் என மேலும் உரைக்க நின்றது. |
| கிளைஞர் - சுற்றத்தார்; உபலக்கணையால் உயிர்ச் சுற்றமாகிய தொண்டர்களையும் குறித்து நின்றது. |
| அருப்பு - அரும்பு என்பது அருப்பு என வலிந்து நின்றது. அரும்புதல் - மயிர் முகிழ்த்தல்; பெருமகிழ்ச்சியும் அன்புங் காரணமாக மயிர்முகிழ்த்தல் உளதாம். |
| 1234 |
3133 | பெருகொளி ஞான முண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் மருவுமங் கலநீர் வாசக் கரகமுன் னேந்தி வார்ப்பார் தருமுறைக் கோத்தி ரத்தின் றங்குலஞ் செப்பி "யென்றன் அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க் களித்தே" னென்றார். | |
| 1235 |