[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1549

இப்பாட்டினால் மணத்தில் வெவ்வேறுவகைப் பணி செய்யப்பெற்றமையால் அந்நிலையில் உடனிருக்கப்பெற்ற மாதர்களைக் கூறுகின்றார்.
மேல்வரும் பாட்டில் தவநிலையினாலும், வழிபாட்டு நிலையினாலும், மற்றும் தெரியலாகாவகையில் சிவனது அருள்நிலையினாலும் மணத்தில்வந் தணைந்தார்களைக் கூறுவார்.
அணிதாங்கிச் சென்றோர் - மாலைபுனை மடவார் - பணி முற்றும் எடுத்தார் - பரிசனம் - என்று அவ்வவர் செய்த பணிகள் பற்றி உடம்பொடு புணர்த்திக் கூறியவாற்றால் அவ்வவரும் அவ்வப் பணிகள் காரணமாக வரும் தொடர்பினால் மணத்திற் சார்ந்து அப்புண்ணிய மேலீட்டினால் சோதியிற் புகப் பெற்றனர் என்பது குறிப்பு.
அணிதாங்கி என்றதனால் அணி என்பது ஈண்டு முத்துச் சின்னங்களும் முத்துக் குடை - முத்துப் பந்தர் முதலியனவும் ஏனை விருதுகளும் என்ற பொருளில் வந்தது. அணிதல் - முத்தினா லணியப்படுதல்.
முத்தமாலை புனை மடவார் - புனை - அலங்கரிக்கும் பணி செய்த என்றதாம்; முத்துமாலைக ளணிந்த பெண்கள் என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள். ஈண்டுப் பெண்கள், அலங்கரிக்கும் பணி செய்தனர்; மணமகளாரை அணி புனைதலும் ஏனை மணவணி செய்தலும் அவர்களுக்குரியது என்பதாம். 3121 - 3127; 3128 - 3129 முதலியவை பார்க்க.
மங்கலம் பெருகும் பணி மூற்றும் எடுத்தார்கள் - இவை அட்டமங்கலம் எனப்படும் விளக்கு, நிறைகுடம், கண்ணாடி, கவரி, தோட்டி, முரசு, பதாகை, இணைக்கயல் என்பவையும், சிவபெருமானுக்குச் சிறப்பாக ஆகமங்களுள் எடுத்தோதும் பிறவுமாகிய எல்லாம்; முற்றும் என்றதன் குறிப்புமது.
பரிசனங்கள் - அட்டிற்றொழில் முதலாக ஏனை எல்லாவகைப் பணிகளையும் செய்யும் ஏவலாட்கள், "அமுது சமைத்தளிக்கும் பரிசனம்" (3329 = ஏயர் - புரா - 175) "திருமடத்தி லமுதாக்குவார்" (2465).
வினைப்பாசம் துணிவித்த உணர்வினராய் - வினையின் காரணமாய் வரும் பிறவியும், அதனால் வரும பற்றுக்களும், அவற்றுக்கெல்லாம் மூலகாரணமாகிய பாசம் என்னும் மூலமலம் (ஆணவம்) ஆகிய எல்லாவற்றையும் அறவே ஒழித்துவிட்ட உணர்வு ஒன்றே கொண்டவர்களாகி; இது முன்கூறிய அனைவர்பாலும் கூட்டநின்றது.
தொழுது - பிள்ளையாரையும் இறைவரையும் தொழுதுகொண்டவாறே; பாசந் துணிவித்தபோது இறைவர் சார்பொன்றே நிகழ; "மெய்ஞ்ஞானத் தோணுவினோடத்துவிதம்" சார்ந்து என்க. தொழுது - தொழுதமையால் என்று காரணப்பொருள்பட வுரைத்து இதுவரை பிள்ளையாருக்கும் தேவியாருக்கும் ஏவற்பணி செய்து வழிபட்ட காரணத்தினால் உடன்புக்கனர் என்றலுமாம்.
உடன் புக்கு - சிவாத்துவிதானந்த நிலையில் உடனாகச் சோதியினுள்ளே புகுந்து. ஒடுங்கினார் - மாசங்காரத்தில் உயிர்கள் சங்கார காரணனாகிய சிவனுள்ளே மாயை பற்றுக்கோடாக ஒடுங்குவன என்பது ஞானநூல் முடிபு. "ஒடுங்கி" என்பது இறைவருக்குப் பெயராய் வருவதும் காண்க(போதம் - 1).

1251

3150
ஆறுவகைச் சமயத்தி லருந்தவரு மடியவருங்
கூறுமறை முனிவர்களுங் கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால் வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினு ளெல்லாரும் புக்கதற்பின்,

1252