[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்833

  இயல்பாதலின் வினைபற்றி வந்தவுவமுமாம்; கழுதுபோல் என்றதும் இவ்வாறே உருவும், பிறரைப்பற்றி அலைத்தலாகிய வினையும் பற்றி வந்தவுவமம்; கழுதுபோல் வரும் என்றது இரவிற் பேய் போன்று என அவர்தம்மியல்பு பற்றியும், இருளென ஒருபால் ஈண்டினர் என்று பகலில் இருள் போன்று எனப் பிள்ளையார் முன் அவர்தம் நிலைபற்றியும் தெரிவிக்க இரண்டு வகையால் உவமை கூறினார் ; " இருட் குழாஞ் செல்வது போல" (1349)-ல் உரைத்தவையும், "அவ்விருளன்னவர்" (1387) முதலியவையும் பார்க்க.
  பகல்வரக் கண்ட இருளென ஒருபால் ஈண்டினர் - பகலில் வந்தபோது இருள் செயலின்றி ஒருபுடை ஒதுங்கும் இயல்பும் குறித்தது;
  ஒருபால் ஈண்டினர் - வஞ்சகச் சூழ்ச்சி புரிவார் வெளிப்படையானன்றி ஒருபுடை மறைவிடத்துக் கூடுதல் இயல்பாம் என்ற குறிப்பு.
  இழுகு மெய்யிருட்கிருள் - என்று பாடங் கொள்வாரு முண்டு; இப் பொருட்கு, மெய்யிருட்கு இவர்களின் உடலின் இருளி (கருமை) னுக்கு; இருள் இழுகும் - பூத இருளும் பின்னடையும் என்றுரைக்க; இழுகுதல் - பின்னடைதல்;
 

678

2577
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையா ரமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத் தொண்டர்தங் குழாங்கள்
எங்கு மோதிய திருப்பதி கத்திசை யெடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்,
 

679

2578
"மற்றிவ் வான்பழி மன்னவன் மாறனை யெய்திச்
சொற்று" மென்றுதஞ் சூழ்ச்சியு மொருபடி துணிவார்
கொற்ற வன்கடைக் காவலர் முன்சென்று குறுகி
"வெற்றி வேலவற் கெங்களை விளம்புவீ" ரென்றார்.
 

680

  2577. (இ-ள்) அங்கண் மேவிய சமணர்கள் அவ்விடத்துப் பொருந்திய சமணர்கள்; பிள்ளையார்....புக்கிட - பிள்ளையார் எழுந்தருளிய பெருந்திரு மடத்தின் கண்ணே திருத்தொண்டர் கூட்டங்கள்எவ்விடத்தும் கூடிப்பெருக ஓதிய திருப்பதிகத்தின் இசை ஓங்கி மேலெழும் பேரொலியானது தமது செவிப்புலங்களிற் புகுத; பொறாராய் - பொறுக்கலாற்றாதவர்களாகி,
 

679

  2578. (இ-ள்) "மற்று...சொற்றும்" என்று - "மற்று இந்தப்பெரும் பழியினை மன்னவனாகிய பாண்டியனை யடைந்து சொல்வோம்" என்று கொண்டு; தம் சூழ்ச்சியும்...துணிவார் - தமது சூழ்ச்சியினையும் ஒரு படியாகத் துணிவு கொள்வாராகி; கொற்றவன்...குறுகி - அரசனது அரண்மனை வாயில் காப்போர்முன் போய்க் குறுகி; வெற்றி...விளம்புவீர்" என்றார் - வெற்றியுடைய வேலேந்திய அரசனிடம் நாங்கள் வந்த செய்தியினை அறிவியுங்கள் என்று கூறினார்.
 

680

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  2577. (வி-ரை) அங்கண் மேவிய - முன்பாட்டிற் கூறியபடி கண்டு கலங்கி ஒரு பால் ஈண்டிய.
  துங்க மா மடம் - துங்கம் - உயர்வு; மா - சிறப்பு; துங்கம் மா என்பவை பொருளானும் அருளானும் பெருமை குறித்தன. ஒரு பொருட் பன்மொழி மிகப் பெரிய என்று மிகுதி குறித்ததென்றலுமாம் "செல்வப் பெருமடம்" (2507) என்பது காண்க. தக்கயாகப் பரணியிலும் இதனைப் பெருமடம் என்பதும் காண்க.