[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்931

  யைப் பறித்து - சாகும் அவத்தையிலுள்ளோர் தலை பறித்தல் நோய் முடுகிய நிலை; அது போல இவர்களும் மயிர் பறிக்கும் ஒழுக்குள்ளவர்; சரித விளைவுக் குறிப்புமாம். பொடி - சுக்கு முதலியவை கூட்டிய பொடி தின்னும் சமண ஒழுக்குக் குறித்தது; "சுக்குத் தின்னும்"(தேவா); வாய் சகதிக்கு நேராம் அவர் - சகதி(சேறு) போல வாய் நாற்றமுள்ளவர்கள்;-(10) இடுக்கு - வஞ்சம்;-(11) எக்கர் - வஞ்சகர்; துளங்கும் முடித்தென்னன் முன்னிவை - உரை செய்த - வெப்புநோய் மிகுதியால் தலை நிலைநிற்கலாற்றாது நடுக்கமுற்றுக் கிடந்த பாண்டியன் முன்பு இப்பதிகம் பாப்பட்டது என்ற சரித வரலாற்று அகச்சான்று.
2661
யாதுமொன் றறிகி லாதா ரிருளென வணையச் சென்று
வாதினில் மன்ன வன்றன் வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன் சிரபுரத் தவரைப் பார்த்தான்
 

763

  (இ-ள்) யாதும்...சென்று - ஏதேனும் உண்மைநிலை ஒரு சிறிதும் அறியும் ஆற்றலில்லாராகிய அமணர்கள் இருளைப்போல அரசனைக் கிட்டிச் சென்று; வாதினில்.....தீர்ப்பார் - வாதத்தின் முற்பட்டு மன்னனுடைய இடப்பாகத்து நோயினைத் தீர்ப்பார்களாகி; மீது...தடவிட - அவன் உடம்பின்மேல் தமது மயிற்பீலிக் கற்றையைக் கொண்டு(மந்திரித்துத்) தடவ; வெப்பு மேன்மேல் தீதுற - வெப்புநோய் மேன்மேலும் அதிகரித்துத் தீமை செய்ததனால்; பொறாது - ஆற்றமாட்டாதவனாகி; மன்னன்.... பார்த்தான் - அரசன் சீகாழித் தலைவரை வாதினில் தமது நோயினைத் தீர்க்க வேண்டுமென்ற குறிப்புடன் பார்த்தான்.
  (வி-ரை) யாதுமொன்றும் அறிகிலாதார் - அமணர்; யாதும் என்பது அறியும் பொருளையும், ஒன்றும் என்பது அறியும் அளவையும் குறித்தன; ஒன்றும் - முற்றும்மை தொக்கது. "யாது மொன்றுமென் பக்கலுண்டாகில்"(410); அறிகிலாதார் - கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை: "வெம்பவரு கிற்ப தன்று கூற்றம் நம்மேல்" (தேவா - அரசு - தாண்); உண்மைநிலை யறிவும், அஃதில்லை யாயினும் அனுபவத்தாலறியும் ஆற்றலு மில்லாதாராதலின் இவ்வாறு இவ்வாதத்தில் துணிந்து முற்பட்டனர் என்பது குறிப்பு.
  இருள் என - இருட் கூட்டம்போல்; உருப்பற்றிய உவமம்; "இழுது மையிருட் கிருள் என"(2576).
  அணையச் சென்று - தாங்கள் நின்ற இடத்தினின்று பாண்டியனை அணுகச் சென்று.
  மீது - பாண்டியனது உடலின்மேல்; பீலி - அமணகுருமார் எப்போதும் மயிற்பீலி கையிற்பிடித்தல் மரபு; தம்பீலி கொண்டு - தாம் கையிற் பிடித்த பீலியினாலே; கொண்டு - கருவிப்பொருளில் வந்த மூன்றாவதன் சொல்லுருபு.
  பீலியினால் தடவுதல் - மந்திரிக்கும் முறையில் அவர்கள் செய்யும் கிரியை.
  வெப்பு மேன்மேல் தீதுஉற - தடவத் தடவ முன்னைய வெப்பு மேலும் மேலும் தீயதாய்ப் - வெப்பு மிகுவதாய்ப் -பொருந்த - அதிகரிக்க; தீது - வெப்பம் - தீத்தன்மை.
  பொறாது - பொறுக்கமாட்டாதவனாகி; தாங்கலாற்றானாகி.
  பார்த்தான்-"கண்ணிற் சொலி" என்பது அரசரிலக்கணமாதலின் ‘இதில் அமணர் தோற்றனர்; இனி நீவிர் நும்பக்கத்து வாதத்தினைமேற்கொள்க’ என்ற