[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்983

  தோற்றமுறையில் நீரைத் தன்பாற் றோற்றுவிக்கவும், ஒடுக்குமுறையில் அதனைத் தன்னின் ஒடுக்கவும் வல்லது தீ; ஆதலின் அதனில் தோல்வி நீரினில் தோல்வியை உள்ளிட்டதாம் என்க. இனி, வலிய நெருப்பினில் இவர்களை வென்று தோல்விபெறச் செய்த பிள்ளையார் அதனின் கீழதாய்க் குறைந்த வலிமையுடைய நீரினில் வெல்லாது விடுவரோ? வென்றேவிடுவர்; ஆதலின் இவர்கள் வெல்வரோ என்று பிள்ளையாரைப் பற்றி உரைப்பதும் கருத்து; ஆனால் இப்பாட்டுக் கருத்துக்கள் முழுமையும் அமண அடிகளைப் பற்றியே எழுதலின் இவ்வாறு அவர் செயல்பற்றிக் கூறினார்.
  இருப்பு நெஞ்சம் - இரும்புபோற் கடிய நெஞ்சம்; அன்பு கலவாத முழு வன்கண்மையுடைய மனம்; இருப்புநெஞ் சுடையார் - அமண அடிகண்மார்; வஞ்சனை சித்திரித்துக் கொலையும் சூழத் துணிபவர்; உடையரேனும் - உம்மை சிறப்பு. எதிரோ - எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையராவரோ; எதிர்க்க வல்லவரோ? எதிர் அல்லர் என வினா எதிர்மறை குறித்தது.
  பருப்பொருள் உணர்ந்தார் - பசு தர்மங்களாகிய அறங்களை விதிக்கும் நூல்களை மட்டும் கற்று, அவற்றின் நுண்பொருளாகிய உள்ளுறையை அறியாதார்; பாவ புண்ணியங்களை உணராதார். இலிங்க புராணத் திருக்குறுந்தொகையும், "கங்கை யாடிலென்" என்பன முதலாக வரும் தனித் திருக்குறுந்தொகையும், பிறவும் பார்க்க; "பூசுநீறு சாந்த மெனப் புனைந்த பிரானுக்கான பணி, யாசிலாநல் லறமாவ தறிய வருமோ உமக்"கென்று தண்டியடிகள் புராணத்துள்(6) இந்நுட்பம் விளக்கப்பட்டதும், பிறவும் காண்க. இவ்வாறன்றி நுண்பொருளாவது இயற்கையினூடு இரண்டறக் கலந்துள்ள இறையின் உண்மை என்றுரைப்பாரும் உண்டு; இயற்கை என்ற சொல்வழக்குப் பொருளற்ற தொன்றென்பது முன்னரே கூறப்பட்டது. "அறியுமச்சமய நூலினளவினி லடங்கிச் சைவ, நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமை" (2501); "அந்நூற் றன்மை யுன்னிய மாந்தர், இதுவே பொருளென் றதனிலை யறைதலின், வேற்றோர் பனுவலேற்றோர்க் கிசையா, மாறு பாடு கூறுவரதனாற், புறச்சம யங்கள் சிறப்பில வாகி, அருளின் மாந்தரை வெருளுற மயக்கி, யலகைத் தேரின் நிலையிற் றீரும்" (சங்கற்ப நிராகரணம் - பாயிரம்)
  படுவன - அழிந்துபடும் நிலைகள்.
  மருப்புடைக் கழுக்கோல் - மருப்பு - கொம்புகள்; குத்திக் கொல்லும்படி கூரிய மான்கொம்பு முதலாயின. மருப்புடை - மருப்பின் தன்மையை உடைய. அது போலக் கூரிய; மான்கொம்பினை நுனியிற் பதித்த என்பாருமுண்டு.
  கழுக்கோல் செய்தார் - தோற்றால் கழுவேற்றுவான் இம்மன்னனே என்று ஒட்டினாராதலானும், தோற்பது நிச்சயமாதலானும், அதன்பின் ஒட்டியவாறே மன்னவன் ஆணையிடின் எண்ணாயிரவரையும் கழுவேற்ற அத்துணைக் கழுக்கள் வேண்டப்படுமாதலானும், முன் எச்சரிக்கையாக மந்திரியார் கழுக்களைச் செய்தனர் என்க; இவ்வாறன்றி இவ்வமணரைக் கழுவேற்றி யகற்றுதலில் முனைந்தனர் அமைச்சர் என்ற பொருள்படக் கூறுவனவெல்லாம் பிழை என்க.
 

806

2705
"ஏடுகள் வைகை தன்னி லிடுவதற் கணைந்தா" தென்பார்;
"ஓடுநீ ருடன்செ லாது நிற்குமோ வோலை" யென்பார்;
"நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்ல" ரென்பார்;
"நாடெலாங் காண விங்கு நண்ணுவர் காணீர்" என்பார்;
 

807