பாடல் எண் :3171

குண்டையூர் கிழவர்தாமு மெதிர் காண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார்பாதந் தன்னிற் றொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
"பண்டெலா மடியேன் செய்த பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார்தாமே நென்மலை யளித்தா" ரென்று,
17
(வி-ரை.) குண்டையூர் கிழவர்....நின்று - குண்டையூர் கிழவரும் எதிர்கொண்டு வந்து குற்றமற்ற வாய்மையுடைய தொண்டனாராகிய நம்பியாரூரருடைய திருவடியில் தொழுது நிலமுறவிழுந்து எழுந்து நின்று; பண்டெலாம்.......என்று - முன் காலமெல்லாம் அடியேன் தேவரீருக்குச் செய்து வந்த பணிவிடை எனக்கு இன்று முட்டுப்பாடுற்றபோது தேவர் பெருமானாராகிய சிவபெருமானார் தாமே நெல் மலையினை அளித்தருளினார் என்று சொல்லி;
(வி-ரை) எதிர்கொண்டு - நம்பியாரூரரை எதிர்கொண்டு வந்து.
கோதில் வாய்மை - கோதில் - என்றது தன்மை விளக்கி நின்றது.
பண்டெல்லாம்....பணி - முன்னாளிலெல்லாம் அடியேன் உமக்கு அமுதுபடி சமைத்து வந்த பணி.
அண்டர் தம்பிரானார் தாமே நான் வேண்டிக்கொள்ளாமலே அவர்தாமே தமது கருணைப் பெருக்கினாலே. என்று - என்ன - என வரும் பாட்டுடன் முடிக்க.
அளித்தார் - கருணையினால் அருளினார்என்ற குறிப்பு.