பாடல் எண் :3177

பூங்கோயின் மகிழ்ந்தருளும் புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையி னுள்ளணைந்தா ராரூரர்.
23
(இ-ள்) வெளிப்படை, பூங்கோயிலின் கண் மகிழ்ச்சியுடன் எழுந்தருளியுள்ள புற்றிடங் கொண்ட பெருமானை, உள்ளே புகுந்து வணங்கி, இடையறாத பெருமகிழ்ச்சியுடன் துதித்துப், புறத்திற் போந்து, பரிசனங்கள் முதலாயினார்கள் பக்கத்திற் சூழ்ந்து துதிக்கச் சென்று, பரவையாரது ஓங்குகின்ற திருமாளிகையின் உள்ளே நம்பியாரூரர் அணைந்தருளினர்.
(வி-ரை) பூங்கோயில் - திருவாரூர்க் கோயிலின் பெயர் (135).
புராதனர் - மிகப் பழமையானவர். "முன்னோ பின்னோ" என்ற திருத்தாண்டகக் கருத்துப் பார்க்க.
பூங்கோயில்...ஏத்தி - குண்டையூர் சென்று திருக்கோளிலியில் பதிகம் பாடி அருள் பெற்றுத் திருஆரூரில் மீண்ட நம்பியாரூரர் நேரே தமது திருமாளிகையில் எழுந்தருளாது பூங்கோயிலினுட் புக்கு வணங்கிய பின்னரே திருமாளிகையுட் செல்கின்றார். இம்மரபு குறிக்கத் தக்கது. அவனருளா லல்லது ஒன்றையும் செய்யாத சீவன்முத்தரது தன்மைகளே இவ்வாறு விளைவன. திருமுதுகுன்றத்திற் பெற்ற பொன்னையும் (3292), திருப்புகலூரிற் பெற்ற பொன்னையும் (3208) நம்பிகள், ஆட்களின் மூலம் திருமாளிகையுட்போக்கித் தாம் பூங்கோயிலினுட் சென்று இறைவரை வணங்கிச் செல்லும் நிலையும், இவ்வாறே வரும் பிறவும் இங்கு நினைவுகூர்தற்பாலன.
நீங்காத - ஒருகாலும் இடையறாத; இது நம்பிகளது இடையறாத சிவராஜ யோகத்தினியல்பு.
பாங்கானார் - அங்கு மேவினார்கள்; பரிசனங்கள் முதலோர். பாங்கு - உரிமையுமாம்.
ஓங்கு திருமாளிகை - இறைவர் தூதராக இருமுறை எழுந்தருளும் பெருமைக் குறிப்பு.