பாடல் எண் :3193

"அடியேன் பெற்ற மக்களிவ; ரடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தா டொழுதுய்யக் கருணை யளிக்க வேண்டு"மெனத்
"தொடிசேர் தளிர்க்கை யிவரெனக்குத் தூயமக்க"ளெனக் கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார் பரவை யார்தங் கொழுநனார்.
39
(இ-ள்) "அடியேன்...வேண்டும்" என - "இவர்கள் அடியேன் பெற்றெடுத்த மக்கள்; இவர்களை அடிமையாக ஏற்றுக்கொண்டருளித் தேவரீரது மணமுடைய மலரடிகளைத் தொழுதுய்ந்திருக்கும்படி கருணை புரியவேண்டும்" என்று சொல்ல; பரவையார் தங் கொழுநனார் - பரவையாரது கணவனாராகிய நம்பிகள்; தொடிசேர்....எனக்கொண்டு - "தொடிகளை யணிந்த தளிர்போன்ற கையினையுடைய இவர்களிருவரும் எனக்குத் தூய்மையுடைய மக்களேயாவார்கள்" என்று திருவுளம் பற்றி ஏற்றுக் கொண்டு; அப்படியே...கொண்டார் - அவ்வாறே மக்கண் முறைமையாகும்படி கொண்டருளினார்.
(வி-ரை) "அடியேன்...வேண்டும்" என இது கோட்புலியார் நம்பிகளை நோக்கிக் கூறியது; அடிமையாகக் கொண்டருளி என்றும், மலர்த்தாள்
தொழுது உய்ய - என்றும் கூறியன இவர்களைத் திருமணஞ் செய்து உரிமைப் பொருளாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்னும் குறிப்புடையன; உய்ய - இவர்களை உய்யச் செய்ய.
"தொடிசேர்" மக்கள் எனக்கொண்டு - இது நம்பிகள் திருவுள்ளத்துக் கொண்ட துணிபு. அதன் விளைவாகிய சொல்லும் செயலும் மேல்வருவன காண்க. கொண்டு - உட்கொண்டு - துணிந்து.
தொடிசேர் தளிர்க் கையிவர் - இயற்கை நலமும் செயற்கை வளமும் இருவர்பாலும் ஒன்று போல அமைந்தமை குறிப்பு. தொடி - கைவளைவகை; தளிர் - மாந்தளிர் போன்ற; செம்மை மென்மை முதலிய பண்புகள் கொண்ட ; தூய - ழுஎழு பிறப்புந் தீயவை பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின்"(குறள்) என்றபடி, பிறந்தகம், புக்ககம் என்ற இரண்டிடமும் தூய்மையாகும்படி வாழ்வளிக்கவல்ல என்ற குறிப்பு.
அப்படியே - மனத்துட்கொண்டபடியே; துணிந்தவாறே.
மகண்மையாக் கொண்டார் - தாம் பெற்ற மக்களேயாகும் முறைமை தந்து ஏற்றுக்கொண்டார். "பிறப்பித்தெடுத்த பிதாவாக" (3196) ஒருவர் தந்த கொடைப்பொருளைப் பெறுபவர் ஏற்றுக் கொண்டாலன்றிக் கொடை முற்றுப் பெறுதலில்லை என்பது நூன்முறையாதலின் கொண்டார் என்றார்.
மகண்மை - மகளாராந் தன்மை; மகன்மை - மகனாந்தன்மை என்பதுபோல; "அன்பினான் மகன்மை கொண்டார்" (151); மகண்மையா - ஈன்ற பெண்மக்கள் முறைமையாக; - ஆக.
அப்படியே - அரன்போல வேண்டுபவர் வேண்டியதே ஈதல் அன்றோ அடியவர்க்கும் கடன்? எனில், கோட்புலியார் சொன்னவாறே என்ற குறிப்புமாம். என்னை? அடிமையாகக் கொண்டருளுதலும், மலர்த்தாள் தொழுதுய்யச் செய்தலும் என்றிரண்டுமே அவர் வேண்டினார்; அவ்விரண்டு தன்மைகளும் மகண்மை (புதல்வியர்) முறையினும் பொருந்துமாகலான் என்க.
பரவையார்தங் கொழுநனார் - முன்னமே பரவையார்தங் கொழுநனாராதலின் கோட்புலியார் உட்கொண்டபடி மணத்தால் இவர்களை ஏற்கும் நிலையில்லை என்று காரணக் குறிப்புப்படக் கூறிய கவிநலமும் காண்க; பின்னர்ச் சங்கிலியார் வரலாறு வேறு; அது பண்டை விதியின் விளைவு என்க. மறையவர்க்கு, மறையவர் மரபேயன்றி ஏனை எல்லா வருணத்தாருள்ளும் மணம் நிகழ்வது முந்தைநாள் நீதிநூல் மரபு என்பது ஈண்டு நினைவு கூர்தற்பாலது.