செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங் குனியுத் திரத்திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க நிறையும் பொன்கொண் டணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணியவெழுந் தருளிச் சென்றங் கெய்தினார். | 46 | (இ-ள்) செறி....வரவும் - (அந்நாளிலே) செறிந்த புன் சடையினை உடைய சிவபெருமானது திருவாரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாளானது அணுக வரவே; பரவையார்....நினைந்து - பரவையார் கொடுப்பதற்கும் திருவிழாவில் அடியார்களுக்கு வேண்டுவன வெல்லாம் குறைபாடின்றிச் செய்வதற்கும் நிறைவாகிய பொன்னினைக் கொண்டு வருதற்கு எண்ணி; நம்பி...எய்தினார் - நம்பிகள் திருப்புகலூர் இறைவரது திருவடிகளைத் தொழுவதற்கு எழுந்தருளிப் போய் அங்குக் சேர்ந்தருளினர். (வி-ரை) திருவாரூர்...குறுகவரலும் - புற்றிடங் கொண்ட பெருமானைக் கும்பிட்டு நம்பிகள் ஓவா இன்பமுற்றிருந்த அந்நாளில் திருப்பங்குனி உத்திரத் திருநாள் அணுக வந்தது. "அந்நாளிலே" என்பது சொல்லெச்சம்; திருப்பங்குனி உத்திரத் திருநாள் திருவாரூரில் மிகச் சிறப்புடையது. 48 நாட்கள் கொண்டாடப்படுவது. இதனுள் விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் முதலாகச் சண்டேசர் இறுதியாக அவ்வம் மூர்த்திகளுக்கும் தனித்தனி விழாக்கள் உண்டு. பங்குனி உத்திரநாளில் வீதிவிடங்கராகிய ஸ்ரீ தியாகேசப் பெருமான் உருத்திர பாத தரிசனந் தந்து ஆழித்தேர் ஊர்ந்து திருவீதி எழுந்தருளுவது பெருஞ் சிறப்பாகும். பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க - அத்திருவிழாவில் பரவையார் விழாக் காணவரும் அவ்வவர்க்கும் வேண்டிய வேண்டியவாறு பொன்மணி துணி முதலியவற்றையெல்லாம் கொடுப்பதும், அடியார்களுக்கு அமுது உறையுள் முதலிய எல்லாம் குறைவின்றி உபசரித்துச் செய்வதும் வழக்கமாகும். அதன் பொருட்டு நம்பிகள் இறைவரிடம் பொன் வேண்டுவதும் வழக்கமாம். பின்னர்த் திருமுதுகுன்றத்திலும் திருப்பாச்சிலாச்சிராமத்திலும் பொன் வேண்டிப்பெறும் வரலாறுகளும் காண்க. அவையும் அவ்வப் பங்குனி உத்திரவிழாவின் பொருட்டேயென்க. இவையொன்றுங் காணமாட்டாத வீணர்கள் சுந்தரர், பரவையாருக்குத் தரப் பொன் இறைவரிடம் வேண்டுவதும் இறைவர் தருவதும் பற்றி மனம் போனவாறு பேசுதல் அறியாமை என்றொதுக்குக. "சுந்தரன் பொன்னைப் பாடுவான்" என்பதாதியாக இவ்வறியாமையே பற்றிப் பாட்டும் பாடிவிட்ட புலவனுமுண்டு. என்னே? இவர்கள் மதியீனமிருந்தவாறு? உலகம் உண்மை கண்டு பெரியோர்பால் அபசாரப்படாது உய்வதாக. கொடைக்கு விழாவில் குறைவறுக்க - கொடைக்கும் விழாவிற்குறைவறுக்கவும். கொடை - பொன் முதலியவற்றைக் கொடுத்தல். இது யாவர்க்கும் செய்யப்படும்; குறைவறுத்தல் - அடியார்க்கு அமுது படைத்தல் முதலாகிய உபசரிப்பு வகை. கொடுப்பதற்குப் பொருளின்மையாகிய குறைவில்லாதிருக்க என்றனர் முன் உரைகாரர்கள். குறைவறுத்தல் - அடியார்க்கு அமுது உறையுள் முதலாக வேண்டிய உபசரிப்புக்கள் செய்தல் என்பது "கண்ணுதலான் திருத்தொண்டனார்க்கெல்லாம் கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல" (2787); "குறைவறுத்தார் பஞ்சவனார்" (கழிறிற். புரா - 95) "குறைவறுப்பேவி" முதலியவை காண்க. திருவிழாவில் இவ்வாறு செய்யும் நியமங்கள் மிகப் பெரிய சிவபுண்ணியங்களாம் என்பது சிவாகம நூற்றுணிபு. அமர்நீதி நாயனார் புராணம் முதலியவை பார்க்க. பொன்கொண் டணைவதற்குத் திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய - நம்பிகள் திருவாரூரிலே தமது இறைவர்பாலே பொன் வேண்டிப் பெற்றிருக்கலாமே? எனில், அற்றன்று; தாம் ஆன்மார்த்த நாயகராகக் கொண்டு வழிபடும் உடைய நாதரிடத்துப் பொன் முதலிய எந்தக் காமியங்களையும் வேண்டலாகாது என்பது சிவாகம விதி. பூசாபலன் கன்மபலன் செபபலன் முதலிய எல்லாவற்றையும் உடைய நாதருடைய வாதத் திருக்கையில் அர்ப்பணம் செய்தல் வேண்டும் என்பது சிவாகமங்களில் விதித்த பூசாவிதி. ஆதலின் திருவாரூரில் புற்றிடங் கொண்டவராகிய தம் உடையவர்பால் ஆரூர் நம்பிகள் பொன் முதலியவற்றை வேண்டிற்றிலர். திருப்புகலூரிலும் திருப்பாச்சிலாச்சிராமத்திலும் திருமுது குன்றத்திலுமே சென்று வேண்டிப் பெற்று அதனைத் திருவாரூர் விழாவில் அடியார்க்குக் குறைவறுக்க உதவியருளினர். பரவையார் கொடைக்கு - நம்பிகள் தந்த பொருள்களை எல்லாம் திருவாரூரில் பரவையார், அவ்வவர் வேண்டியவாறு கொடுத்துவந்தார் என்பது முன்னர்க் குண்டையூர் நெல்லினை ஆரூரில் அவ்வவர் மனை எல்லைக்குட்பட்ட அளவு அவ்வவரே எடுத்துக் கொள்க எனப் பறை சாற்றுவித்துக் கொடுத்தவாற்றானுமறிக. |
|
|