"மழபா டியினில் வருவதற்கு நினைக்க மறந்தா யோ"வென்று குழகா கியதங் கோலமெதிர் காட்டி யருளக் குறித்துணர்ந்து நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபா லேறி நெடுமாடம் அழகார் வீதி மழபாடி யணைந்தார் நம்பி யாரூரர். | 72 | (இ-ள்.) மழபாடியினில்...என்று - திருமழபாடியின்கண் வருதற்கு நினைக்கவும் மறந்துவிட்டாயோ? என்று; குழகாகிய...குறித்துணர்ந்து - இளமையாகிய தமது உரிய திருக்கோலத்தைக் காட்டியருளிச் செய்ய, அதனைக் குறிப்பிட்டுத் துயிலுணர்ந்தெழுந்து, நிழலார்...ஆரூரர் நிழல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கரையினை உடைய காவிரியின் வடகரையில் ஏறிச் சென்று நெடியமாடங்களையுடைய அழகிய வீதிகள் பொருந்திய திருமழபாடியினை நம்பியாரூரர் அணைந்தருளினர். (வி-ரை.) நினைக்க மறந்தாயோ? - வருவதற்கு மறந்தாயோ என்றலே அமையுமாதலின் நினைக்க மறந்தாயோ? என்ற தென்னை யெனின்; நம்பிகள் சிவயோக நிலையினராகி எஞ்ஞான்றும் "பேரா வொழியா மறவாநினையா" என்றபடிக்குள்ள தன்மையுடையராதலின் மறப்பிலர்; நினைப்பின் நீக்கமே மறத்தலாம்; ஆதலின் மறந்தாயோ என்பது பொருந்தாமையின் இங்குக் குறித்தது மழபாடியில் வருதலாகிய சிறப்பு நினைவேயாம் என்பார் நினைக்க என்றார் என்க. "யாரை நினைக்கேனே" என்ற பதிக விளக்கமும் சரிதச் சான்றும் ஆம். குழகு - இளமை; அழகு என்றலுமாம். குழகாகிய தம்கோலம் - என்றும் மாறாது ஒருபடித்தாய் நிற்கும் தமது இன்பமயமாகிய திருக்கோலம்; பதிகத்துப் "பொன்னார் மேனியனே" என்பது முதலாகத் தொடங்கிப், பலபடியும் பாராட்டப்பட்டது. இக்கோலம் எதிர் காட்டக் கண்ட காட்சியின் குறிப்பு. காளையாந் திருவடிவங் காட்டி, "யாமிருப்பது கானப்பேர்" என்று அருளியதும், அத்திருப் பதிகமும் இங்கு நினைவு கூர்தற்பாலன. குறித்து உணர்ந்து - குறித்தலாவது கனா நிகழ்ச்சிகளுட் பல நனவின்கண் செவ்விதின் வாராது போதலின் அவ்வாறின்றி அம்முழுமையும் நனவின் வருமாறு குறி வைத்துத் துயிலுணர்தல். பொன்னி வடபால் ஏறி - காவிரியின் தென்கரை வழியே உள்ள தலங்களை வழிபட்டுத் திருவாலம் பொழிலிற் சேர்ந்தாராதலின். அங்கிருந்து மழபாடிக்கு வடக்கு நோக்கிக் காவிரியையும் கொள்ளிடத்தையும் தாண்டிச் சென்று; கொள்ளிடம் காவிரியின் பிரிவுகளுள் ஒன்றாதலின் வேறு பிரித்துக் கூறாது பொன்னி வடபால் என்றமைந்தார்; பால் - பக்கம். வட பக்கமுள்ள இரண்டு கிளையாறுகளையும் குறித்தது. நடுவு நம்பர்பதி - இவைகட்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! |
|
|