பாடல் எண் :3236

இவ்வகை பரவித் திருக்கடைக்காப்பு ‘மேசினவல்ல'வென்றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார் விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி, வணங்கி,யப் பதியிடை வைகி
எவ்வகைமருங்குமிறைவர் தம்பதிகளிறைஞ்சியங்கிருந்தனர் சிலநாள்.
82
(இ-ள்.) இவ்வகை...இசைப்ப - இவ்வாறு துதித்து "ஏசின வல்ல" என்று திருக்கடைக் காப்பும் சேர்த்திப்பாட; மெய்வகை...அளித்தருள - மெய்யன்பினையே விரும்பும் தமது பெருமானார் தூய நிதிக்குவையினை அளித்தருளவே; மைவளர்....வைகி - திருநீலகண்டராகிய இறைவரது பெருங்கருணையினையே துதித்துவணங்கி அந்தப் பதியினிடத்து எழுந்தருளி; எவ்வகை...சிலநாள் - பக்கத்தில் எப்பாலும் உள்ள இறைவரது பதிகளைச் சென்று வணங்கி மீண்டும் அங்கு எழுந்தருளிச் சில நாட்கள் இருந்தருளினர்.
(வி-ரை.) இவ்வகை - முன் இரண்டு பாட்டுக்களிலும் கூறிய வகையினாலே; திருக்கடைக்காப்பும்...இசைப்ப - முன் பாட்டுக்களில் "இவரலாதில்லையோ பிரானார்" என்று ஏச்சும் இகழ்ச்சியும்படப் பாடியதுடன், திருக்கடைக் காப்பிலும் அதற்கு மாறாக அல்ல என்று இசைப்ப என்று, உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; அதற்கு மாறாக என்பது இசை யெச்சம்.
மெய்வகை விரும்பு தம்பெருமானார் - மெய்வகை - மெய்யன்பின்நிலை; மொழிகளின் நிலையன்றி உள்ளத்தின் மெய்ம்மை நிலையினையே; பிரிநிலை ஏகாரம் தொக்கது; மொழிகளின் நிலையன்றி என்பது இசையெச்சம்.
தம்பெருமானார் - பிணிப்பட வாண்டு ஏவலாளராகக் கொண்ட தலைவர்; (பதிகம். 10)
கருணையே - முன்னர்த் தாழ்த்தஅருளின்மையின்றித் திருவுளத்துட்கொண்ட கருணையினையே; இங்குக் கருணையாவது பாடப் பணித்துப் பாடல் கேட்டு மகிழ்தல்; "அருச்சனை பாட்டேயாகும்" (216) "பித்தனென்றே பாடுவாய்" (219) என்ற முற்சரித வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன.
எவ்வகை மருங்கும் இறைவர்தம் பதிகள் - இதுவரை போந்தது போல மேற்கு நோக்கியே செல்லாது பலபக்கமாகவும் காவிரியினிருகரையாகவும் சென்றருளினர் என்பது; இவை இன்னவென்று தெரியக்கூடவில்லை; திருப்பாச்சிலாச்சிராமத்தின் அருகிலும் சுற்றிலுமுள்ள பதிகள் போலும்!