கண்டவர் கண்கள் காதனீர் வெள்ளம் பொழிதரக் கைகுவித் திறைஞ்சி வண்டமர் குழலார் மனங்கவர் பலிக்கு வருந்திரு வடிவுகண் டவர்கள் கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக் குலவுசொற் "காருலா விய"வென் றண்டர்நா யகரைப் பரவி"யா ரணிய விடங்கரா" மருந்தமிழ் புனைந்தார். | 84 | (இ-ள்.) கண்டவர்....இறைஞ்சி - முன் கூறியவாறு கங்காள வேடராக இறைவரைக் கண்ட நம்பிகள் காதலினாலே தமது திருக்கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர்வெள்ளம் பொழியக் கைகள் கூப்பி வணங்கி; வண்டமர்....கூற்றாக - வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலையுடைய பெண்களது உள்ளத்தைக் கவர்கின்றபடி பலிக்கு வரும் இறைவரது திருவடிவினைக் கண்டு அவர்கள் கொண்டமயலினாலே வினாவுகின்ற பொருளுடைய சொற்களாக வைத்து; குலவு....புனைந்தார் - விளங்கும் சொல் "காருலாவிய" என்று தொடங்கித் தேவதேவரைத் துதித்து "ஆரணீய விடங்கரே" என்ற மகுடங் கொண்ட அருந் தமிழ்மாலை புனைந்தருளினர். (வி-ரை.) காதல் நீர் கண்கள் பொழிதர - என்க; காதல் நீர் - ஆனந்தக் கண்ணீர். வண்டமர்...வடிவு - பிட்சாடணத் திருவுருவம்; தாருகாவனத்து இருடியரது மனைவிமார்களிடம் இத் திருவுருவுடன் இறைவர் சென்று அவர்களை மயங்கச் செய்து அவர்களது மனங்களைக் கவர்ந்த வரலாறு கந்தபுராணத்துட் காண்க. மயலால் அவர்கள் வினவு கூற்றாக - அத் திருவடிவத்தினைக் கண்டு அதில் ஈடுபட்டு மயங்கி அவர்கள் அவரை விளித்துப் பேசும் காதற் சொற்களாகிய பொருள் கொண்டு. இது பதிகக் கருத்தும் குறிப்புமாக ஆசிரியர் காட்டியவாறு; "மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்" (11) என்ற பதிகத்தினை ஆசிரியர் பொருள் விரித்தவாறு. "காருலாவிய" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. "ஆரணீய விடங்க"ராம் அருந்தமிழ் - ஆரணீய விடங்கரே என்று பாட்டுத்தோறும் முடிபுகொண்டு இறைவரை விளித்து வினவிய தமிழ்ப் பதிகம்; ஆம் - முடிபுகொண்ட; ஆரணீயம் - வனத்தின் வரும்; வனத்தைப் பற்றிய; ஆரண்யம் - காடு; விடங்கர் - உளி படாத திருமேனியுடையவர்; ஒருவரால் ஆக்கப்படாது தாமாகச் சமைந்த இயற்கைத் திருவடிவம்; மேலே வேறு அணிந்து மறைக்கப்படாத நக்க வடிவம் என்பதும் குறிப்பு. வண்டறை - என்பதும் பாடம். |
|
|