பாடல் எண் :3246

ஆயிடை நீங்கி யருளினாற் போவா
ரருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் டமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்றிசைக் கற்குடி மலையில்.
92
(இ-ள்.) ஆயிடை....போல்வார் - அவ்விடத்தினின்றும் நீங்கி அருள் விடைபெற்றுச் செல்லும் நம்பிகள்; அருவரை....பரவி - கடத்தற்கு அரிய மலைக் கானங்களும் மற்றும் நிலங்களும் பெருகிப் பாய்கின்ற நதிகளுமாகிய பலவற்றையும் கடந்து சென்று இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கிப் பொருந்திய வளப்பமுடைய தமிழ்த் திருப்பதிகங்களாலே துதித்து; வெஞ்சமாக் கூடலும் பணிந்து - திருவெஞ்சமாக் கூடலினையும் தொழுது; சேயிடை....மலையில் - நெடுந்தூரம் கடந்து சென்று தென்றிசையில் உள்ள திருக்கற்குடி மலையில் வந்து அடைந்தருளினர். (வி-ரை.) ஆயிடை நீங்கி - ஆயிடை - அவ்விடத்தினின்றும்; இடை - இடம்; இடையினின்றும். நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது.
அருளினால் - அருள்விடை பெற்று.
அருவரை....கடந்து - கற்சுரங்களுங் கட்டாறுகளுமாயுள்ளன மேல் கொங்கு நாட்டின் நிலையும் அதனை ஒட்டிய கீழ் கொங்கின் நிலையுமாம். "கானகமுந், துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற் சுரமுங் கடந்தருளி" (வெள்-சருக்-15), "கற்சுரமு நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழிய" (கழறிற். புரா. 164) முதலியவை பார்க்க.
பதிபல - இவை மூலனூர், தென்னிலை, கருவூர் முதலாயின என்பதும்,
நதிகள் - அமராவதி - நன்காஞ்சி - சிற்றாறு - குழகனாறு முதலியன என்பதும் கருதப்படும்.
வெஞ்சமாக் கூடல் - கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. தலவிசேடம் பார்க்க.
சேயிடை கழிய - இடையிலே பட்ட நெடுந்தூரம் நாடு கடந்து.
கென்றிசை - கொங்கு நாட்டின் தெற்குத் திசையில் உள்ள.