பாடல் எண் :3264

மேவிய காதற் றொண்டு விரவுமெய் விருத்தி பெற்றார்
"ஆவியின் விருத்தி யான வந்தணர் புலியூர்
மன்றிற்
காவியங் கண்டர் கூத்துக் கண்டுகும் பிடுவ" தென்று
வாவிசூழ தில்லை மூதூர் வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
110
(இ-ள்.) மேவிய...பெற்றார் - பொருந்திய பெருவிருப்பத்தினாலே திருத்தொண்டினுடன் கூடிய நிலை தமது பிறவித் தொழிலாகப் பெற்ற நம்பிகள்; ஆவியின்....மன்றில் - ஆன்ம லாபத்துக்குரிய தொழில் புரியும் அந்தணர்கள் வாழும் திருப்புலியூர்த் திருவம்பலத்திலே; காவியங் கண்டர்...என்று, - நீலகண்டராகிய இறைவரது திருக்கூத்தினை நேரே கண்டு கும்பிடுவோம் என்று எண்ணி; வாவிசூழ்...போந்தார் - பொய்கைகள் சூழ்ந்த திருத்தில்லையாகிய பழம்பதியினைநோக்கிச் செல்லும் பொருட்டு இறைவரை வணங்கிச் சென்றருளினர்.
(வி-ரை.) மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்திபெற்றார் - பெரு விருப்பத்துடன் தொண்டு செய்வதே தமது உடம்பினாலாய பிறவித்தொழிலாகப் பெற்றவர்; மெய்விருத்தி - உடம்பினால் செய்யும் உறுதொழில்; "மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும், வேதியர் குலத்துட்டோன்றி" னாராதலின் விருப்புடன் அகம்படித் தொண்டு செய்தல் உறுதொழிலாயிற்று; அதுவேயுமன்றி, அடியானாகத் தடுத்தாட்கொள்ளப் பெற்ற ஞான்று, "அருச்சனைபாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று இறைவர் ஏவியருளியபடி மெய்த்திருவாக்கின் றொண்டு செய்து சொல்லுதலும் விருத்தியாயிற்று; விருத்தி - தொழில்; சீவனோபாயம் என்பர். இவையேயன்றித் தமக்கு வேறு தொழி லில்லாமையால் அத்தொண்டினை ஏற்றுக்கொள்ளும் இறைவர்க்கு இவரைக் காத்தல் கடனாயிற்று; அதுபற்றியே பொருள் வேண்டிய வேண்டியவாறே வேண்டிய வேண்டிய காலத்தும் இடத்தும் பெறலாயினர் என்ற குறிப்பெல்லாம் கண்டுகொள்க.
ஆவியின் விருத்தி - பிறவிப்பயன் - ஆன்ம லாபம் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை; முன்னர் மெய்விருத்தியைக் கூறினார்; இங்கு உயிர்க்குறுதிப் பயன் கூறப்பட்டது. "ஊனாலு முயிராலு முள்ளபயன் கொளநினைந்து" (1421) என்ற கருத்து ஈண்டு வைத்துக் காணற்பாலது; ழுஊனடைந்த உடம் பின் பிறவியே, தானடைந்த உறுதியைச் சாருமால்...தாடொழ" (2) என்பதும், பிறவும் காண்க. ஈண்டு விருத்தி என்றது உறுதிப் பயன் என்ற பொருள் தந்துநின்றது; விருத்தியான - புலியூர் மன்று - என்று கூட்டுக.
மெய்விருத்தி - ஆவியின் விருத்தி - ஆக்கச் சொல் உளதாக்கும் என்ற பொருள் தந்துநின்றது. ஈண்டு, இவ்வாறன்றி, மெய்விருத்தி - மெய்ம்மையான சித்திவிருத்தி என்றும், ஆவியின் விருத்தி - அவி - என்பது ஆவி என முதனீண்டதென்று கொண்டு வேள்விகளை வேட்டலே தமது தொழிலாகக்கொண்ட என அந்தணருடன் கூட்டியும் உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
கும்பிடுவது - இது நம்பிகள் திருவுள்ளத்துட் கொண்ட துணிபு.
வழிக்கொள்வான் - வழிக்கொள்ளும் பொருட்டு; செல்லும் பொருட்டு.
வணங்கி - திருமுதுகுன்றரை வணங்கி விடைபெற்று.
கும்பிடுவனென்று - என்பதும் பாடம்.