பாடல் எண் :3294

அணியாரூர் மணிப்புற்றி னமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவாரங் கொருநாளிற் பாராட்டுந் திருப்பதிகந்
தணியாத வானந்தந் தலைசிறப்பத் தொண்டருடன்
பணிவாய்ப்பே ரருள்வினவித் தொழுதாடிப் பாடுவார்,
140
(இ-ள்.) அணியாரூர்....ஒருநாளில் - அழகு பொருந்திய திருவாரூரில் மணிப்புற்றினிடமாக விரும்பி எழுந்தருளிய பெருமானை நியதமாகப் பணிவாராகிய நம்பிகள் அங்கு ஒரு நாளில்; பாராட்டும்...தலைசிறப்ப - இறைவரைப் போற்றுகின்ற திருப்பதிகத்தின்கண் தணிதலில்லாத ஆனந்தம் மேலிட; தொண்டருடன்.....பாடுவார் - திருத்தொண்டர்களுடனே துணிவுபடப் பேரருளின் திறங்களைத் தனித்தனி வினவுகின்ற வகையாலே தொழுதும் ஆடியும் பாடுவாராகி (நம்பிகள்).
(வி-ரை.) அணி ஆரூர் - "அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே" என்பது முதலாக வரும் திருத்தாண்டகங்கள் பார்க்க.
அமர்ந்து அருளும் - விரும்பி யிடங்கொண்டிருந்து உயிர்களுக்கு அருள்புரியும்.
பணிவார் - பாடுவார் - என்று கூட்டுக; பாடுவார் - ஏத்தி - இன்புற்றார் என வரும்பாட்டுடன் முடிக்க. பாராட்டும் - திருவருள் நிலைகளைப் பலவாறும் எடுத்துத்துதிக்கின்ற.
தணியாத....வினவி - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு, பலபடப் பாராட்டுதலும் பொருள் வினவுதலும் பதிகப் பாட்டுத்தோறும் கண்டுகொள்க.
தணியாத ஆனந்தம் தலைசிறப்ப - குறைவுபடாத சிவானந்தமாகிய பெருமகிழ்ச்சியின் அனுபவம் மேன்மேலும் சிறந்தோங்க; தலை சிறத்தல் - ஓங்குதல்.
தொண்டருடன் - பொருள் வினவி - தொண்டர்களுடன் கலந்து இறைவரது பெருமைகளை அறியார் போன்று வினவிப்பாடுதல் திருவருளிற்றிளைக்கும் வகைகளுட் சிறந்தது; "அன்பரொடுமரீஇ" என்பது (போதம் - 12சூத்.) ஞான நூன் முடிபு.
இது சீவன்முத்தர்களது தன்மைகளுள் ஒன்றாகப் பேசப்படும். திருக்கண்டியூர் பிள்ளையார் பதிகமும், திருவாரூரில் முதன் முறை சாரும்போது மூவர் பதிகங்களும் பார்க்க. திருத்தொண்டின் சிறப்புடைய பதி திருவாரூர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது; "பத்தர் காள்பணிந் தேத்தி னேன்பணி யீர்" என்ற பதிக அகச்சான்று காண்க.
துணிவாய பேரருள் - முடிந்த முடிபாகிய பேரருளாவது சிவனருள் வகையேயாம்; துணிவு - முடிந்த முடிபு.
துணிவாய பேரருள் வினவி - என்பதும் பாடம்.