பாடல் எண் :3298

விண்டடவு கோபுரத்தைப் பணிந்துகர மேற்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார் கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில மிசைப்பணிந்தார்.
144
(இ-ள்.) விண்தடவு...புகுந்து - ஆகாயத்தை அளாவிய திருக்கோபுரத்தின் முன்பு நிலமுறப் பணிந்து எழுந்து கைகளை உச்சிமேற் குவித்துக்கொண்டுஉள்ளே புகுந்து; அண்ணலார்....வலஞ் செய்து - நம்பிகள் திருக்கோயிலினை வலமாக வந்து; மண்டிய.....பணிந்தார் - மிக்கெழுந்த பேரன்பினோடும் நிலை பெற்ற திருநள்ளாற்றிறைவரது தாமரை போன்ற அழகிய திருவடிகளிலே பொருந்தும்படி நிலமுற வீழ்ந்து வணங்கினார்.
(வி-ரை.) விண் தடவுதல் - விண்ணின்மேல் மிக உயர்தல். அண்ணலார் - நம்பிகள்; அண்ணலார் கோயில் என்று கூட்டி இறைவரது கோயில் என்றுரைப்பாரு முண்டு;
மண்டிய - செறிந்து மிக்கு மேலெழுந்த.
நள்ளாறர் - "நள்ளாறனை அமுதை" என்பது பதிக ஆட்சி.
சேவடிக்கீழ்ப் பொருந்த நிலமிசைப் பணிந்தார் - அடி யென்பது நிலமுற உள்ள தென்பது ஏனையோர்க்கு ஒக்குமாயினும் இறைவர்பால் உபசார மாத்திரையாய் நிற்கும்; அவ்வுபசார வழக்கே பற்றி இவ்வாறு கூறினார். இறைவர் திருமுன்பு நிலமுற வீழ்ந்து பணிதல் தம்மை முழுதும் அவர் வசமாக்கும் நிலைகாட்டுவதாம்.