பாடல் எண் :3305

அப்பதியி லன்பருட னமர்ந்தகல்வா ரகலிடத்திற்
செப்பரிய புகழ்நீடூர் பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினா னினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் டமிழ்மாலை விளம்பியே மீண்டணைந்தார்.
151
(இ-ள்.) அப்பதியில்....அகல்வார் - அப்பதியின்கண் அன்பர்களுடன் கூடி விரும்பி எழுந்தருளியிருந்து மேற்செல்வாராகி; அகலிடத்தில்....செல்பொழுதில் - சொல்லுதற்கரிய தாகிய புகழ் நீடூரினைப் பணியாமற் செல்லும்போது; ஒப்பரிய...தொழலுறுவார் - ஒப்பில்லாத மெய்யுணர்வினால் நினைந்தருளி வந்து தொழுவதனை மேற்கொள்வாராகிய நம்பிகள்; மெய்ப்பொருள்....மீண்டணைந்தார் - மெய்ப்பொருளை விரிக்கும் வளப்பமுடைய தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடியே மீண்டு வந்து அணைந்தருளினர்.
(வி-ரை.) அகலிடத்தில் செப்பரிய புகழ் நீடூர் - அகலிடம் - இடமகன்ற நிலவுலகம்; புகழினையுடைய நீடூர் என்றும், புகழ் நீடும் ஊர் என்றும் சிலேடை நயம்படக் கூறிய கவிநலம் காண்க. "செல்வ நீடூர் திருநீடூர்" (முனையடுவார் புரா. 1)
பணியாது செல்பொழுதின் - திருநின்றியூரினின்றும் செல்லும்பொழுது அணிமையில் உள்ள திருநீடூரிற் சென்று பணியாது மேலே செல்லத் தொடங்கியபோது;
ஒப்பரிய உணர்வினால் உணர்ந்தருளி - ஒப்பரிய உணர்வு - மெய்யுணர்வு; இது எஞ்ஞான்றும் சிவனை மறவாத நிலையினால் உண்டாவது; செல்லும் வழியில் ஒரு சிவாலயம் இருப்பின் அடியார்கள் அதனைச் சென்று வழிபட்டன்றி மேற்செல்லலாகாது என்பது விதி; அவ்விதி கடந்து செல்வது பிழையாமென்பது உணர்வினில் தானே உணர வருவது மெய்யுணர்வின் இலக்கணம். "நானேது மறியாமே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்" (தேவா).
தொழல் உறுவார் - தொழுவதனை மேற்கொண்டார்.
மெய்ப்பொருள் வண் தமிழ்மாலை - உண்மைப் பொருளைப்பற்றி வெளிப்போந்த வளப்பமுடைய திருப்பதிகம்; மெய்ப்பொருள் - மெய்யுணர்வினால் வருவது; வண்மை - அதனை உலகுக்கறிவித்து உய்விப்பது. விளம்பியே - பாடியருளியவாறே; ஏகாரம் அதன் வண்மை உணர்த்திற்று; மேற்பாட்டும் பார்க்க. இப்பதிகம் மீண்டணையும் வழியில் அருளியது.