உண்ணீரின் வேட்கையுட னுறுபசியான் மிகவருந்திப் பண்ணீர்மை மொழிப்பரவை யார்கொழுநர் வரும்பாங்கர்க் கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து தண்ணீரும் பொதிசோறுங் கொண்டுவழிச் சார்கின்றார். | 156 | (இ-ள்.) உண்ணீரின்....வரும்பாங்கர் - உண்ணும் நீரின் வேட்கையுடனே பொருந்திய பசியினாலும் மிகவும் வருந்திப் பண்ணின் நீர்மை பொருந்திய மொழியினையுடைய பரவையம்மையாரது கணவராகிய நம்பிகள் வரும் பக்கத்திலே; கண்ணீடு....கருத்தறிந்து - கண்பொருந்திய திருநெற்றியினையுடைய சிவபெருமான் தம்பாற் காதலுடைய நம்பிகளது கருத்தினை யறிந்தாராதலின்; தண்ணீரும்...சார்கின்றார் - தண்ணீரினையும் பொதிசோற்றினையும் உடன் கொண்டு அவ்வழியிலே சார்கின்றாராய், (வி-ரை.) உண்நீரின் வேட்கை - தாகம் என்பர். நீர்வேட்கை என்பதே யமையும்; உண் - என்பது மிகையாம் பிறவெனின்? உண்ணும் நீர் தக்கபடி வேறாயமைக்கவும் கொள்ளவும் படுதல் வேண்டிய நிலை குறிக்க உண்ணீர் எனப்பட்டது; "வெயிலின்வைத், தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப, மடாஅ வொருவன் விடாஅ வேட்கை, தெண்ணீர்க் குற்றமன்று" (திருவிடை - மும். கோவை 6) என்ற பட்டினத்து அடிகளார் திருவாக்கும் காண்க; "தண்ணீரமுதம்" (புராண வரலாறு - 82) என்று இதனை விதந்து வேறு கூறியதும் கருதுக. உறுபசி - உறு - பெரியோரிடத்தும் ஓரோர்பொழுது வந்து தாக்கும் தன்மையுள்ள; கனல் வாதை வந்தெய்தின்" (தாயுமா) என்று பெரியோர்களிடம் ஓரோர் கால் வந்து தோற்றப்படுவதன்றி ஏனையோரிடத்துப்போல எப்பொழுதும் உண்பதே தொழிலாயிருக்கும்படி வாராது என்ற குறிப்புப்படக் கூறியது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. பண்ணீர்மை மொழி - உயர்ந்த சாதிப் பெண்களின் குரலில் பண் அமைந்திருத்தலின் மொழிகள் பண்ணின் தன்மை பொருந்தி வெளிவரும் என்பது. வருந்தி - பசியும் நீர்வேட்கையும் வருத்தினும் அவற்றை அறியாது - பொருட்படுத்தாது - சிவத்தொண்டிற் பிறழாது செல்லுதல் பெரியோரியல்பு; "வழிபோம் பொழுது மிகவிளைத்து வருத்த முறநீர் வேட்கையொடும் அழிவாம் பசிவந்தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே, மொழிவேந் தருமுன் னெழுந்தருள" (1569) என்ற அரசுகள் சரிதப்பகுதி ஈண்டு நினைவு கூர்தற்பாலது. கண்நீடு திருநுதலார் கண்நீடு - என்பது அருட்கண் நீடியிருப்பவராதலின் என்று காரணக் குறிப்புப் பெறநின்றது. காதலவர் - எஞ்ஞான்றும் மறவாது தம்பாற் பெருவிருப்புடையவர். கருத்தறிந்து - கருத்து - உடல் வருத்தம் நோக்காது பணியினிற்கும் கருத்து; பசி நீர்வேட்கை வருத்தத்தினை நம்பிகள் அறியாது பணியினின்றாராதலின், அவரது கருத்தினுள் இருந்து, உயிர்க்குயிராகிய இறைவராதலின் அவற்றையெல்லாம் அறிந்தருளி என்பது; "கண்டு காட்டலின்" (போதம் - 11-சூ.) என்ற விடத்து "ஈண்டு அவனும் அவற்றது (உயிர்களது)விடயத்தை யுணரும்" என்று மேற்கோள் எடுத்துக்கூறி யதிகரணம் வகுத்தருளியதும், "முதல்வனும் உயிர்களா னுணரப்படும் விடயத்தை உடனின் றுணருவன்" என்று உரைவகுத்து விரித்தமையும், ஆண்டுரைத்தவையும் இங்கு வைத்துக் கண்டுகொள்க. தண்ணீரும் பொதிசோறும் - நீர்வேட்கை தீர்க்கத் தண்ணீரும், உறுபசிதீர்க்கச் சோறும் என்று நிரனிறையாக் கொள்க; பொதிசோறு - கறியும் கூட்டு உணவு வகைகளும் கூட்டிக்கட்டியசோறு. கட்டுச்சோறு என்பது உலக வழக்கு; பசியினும் கொடியதாய் வருத்தும் சிறப்புப்பற்றி நீர் வேட்கையும், நீரும் முன் வைக்கப்பட்டன; வழிச்சார்கின்றார் - வழி - நம்பிகள் எழுந்தருளி வரும் வழியில்; சார்கின்றாராகி - முற்றெச்சம். சார்கின்றார் - வேடங்கொண்டிருந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. "தன்கடன் அடியேனையுந் தாங்குதல், என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்று ஆண்டானுக்கும் அடிமைக்கும் முறையே கடமைகள் வகுத்த அரசுகள் திருவாக்கும், ஆண்டவன் கடமையை முன்வைத்த வைப்பு முறையும்கருதுக. கண்நுதலார் - சார்கின்றார் - வேதியராய் - வரவு பார்த்து இருந்தார் என்று மேற்பாட்டுடன் கூட்டி அமைத்துக்கொள்க. காதல் வர - என்று பாடங் கொள்வாருமுண்டு. |
|
|