அணைந்தருளு மவ்வேலை யமுதுசெயும் பொழுதாகக் கொணர்ந்தமுது சமைத்தளிக்கும் பரிசனமுங் குறுகாமைத் தணந்தபசி வருத்தத்தாற் றம்பிரான் றிருவாயிற் புணர்ந்தமதிற் புறத்திருந்தார் முனைப்பாடிப் புரவலனார். | 175 | (இ-ள்.) அணைந்தருளும்...பொழுதாக - கும்பிட்ட பின் திருக்கோயிற்புறத்தில் அணைந்த அந்நேரத்தில் திருவமுது செய்தருளும் காலம் ஆயிடவும்; கொணர்ந்து...குறுகாமை - கொண்டுவந்து திருவமுது ஆக்கி உதவும் பரிசனங்களும் வந்து சேராமையினாலே; முனைப்பாடிப் புரவலனார் - திருமுனைப்பாடி நாட்டின் தலைவராகிய நம்பிகள்; தணந்த....புறத்திருந்தார் - நீக்கிய பசியினால் வந்த வருத்தத்தினாலே தமது பெருமானது திருவாயிலினுடன்கூடிய திருமதிலின் புறத்தே தங்கியருளினர். (வி-ரை.) அமுது செயும் பொழுது ஆக - அமுது செய்தற்குரிய காலம்; இது "கடும்பகற்போது" (3332) என்றும், "உச்சம்போது" (பதிகம்) என்றும் ஈண்டு அறியப்படும். காலைக் கடன்களும், இறைவர் வழிபாடும் முடித்தபின் நண்பகல் என்னும் உச்சிப்போதி லன்றி உணவு கொள்ளாமை நமது முந்தையோர் கொண்ட நல்வழக்கு என்பது ஈண்டு அறிவிக்கப்பட்டமை காண்க; இஃது உடலுக்கு நல்வாழ்வும் நீடிய ஆயுளும் தருவது என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மை. Noon break fast System - நண்பகலுக்கு முன் உண்ணாமை - என்று இதனைப் புதியதோர் முறையாகக்கொண்டு கையாளுவர் சில நவீனர். ஆக - ஆகவும்; சாரவும்; சிறப்பு உம்மை தொக்கது. கொணர்ந்து அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை - அமுது கொணர்ந்தாயினும் சமைத்தாயினும் அளிக்கும் என்க; சமைத்தளித்தற்குப் போதிய இடையிருப்பின் சமைத்தும், அஃதில்லையேல் கொணர்ந்தும் அளிக்கும் என்க; கொணர்தல் - பின்னர் இறைவர் செய்தருளியபடி அந்தணர் மனைகளிலிருந்து வேண்டிப் பெற்றுக் கொணர்தல். உணவு அமைத்தற்குரிய சாதனங்களைக் கொண்டுவந்து என்றலுமாம். சோறு விலைக்கு வாங்கிக் கொணர்தல் என்பது முந்நாளில் இல்லை; சோற்று வாணிபம் பிற்காலத்தில் வந்து முளைத்துப் பரவிக் கேடுகள் பலவற்றுக்கும் காரணமாகும் தீய வழக்கங்களுள் ஒன்று; பரிசனம் - நம்பிகளுடனே தலயாத்திரையில் இத்தகைய சமையற் பரிசனமும் ஏவலாளரும் உடன் சென்றனர்; ஆளுடைய பிள்ளையாருடன் பல்லாயிரம் பரிசனமும் பிறரும் உடன் சென்றமையும், துறவற நிலையின ராதலின் ஆளுடையஅரசுகளுடன் அவ்வாறு பரிசனங்கள் தொடராமையும் கண்டு நினைவுகூர்க. குறுகாமை - குறுகாமையால்; வராத காரணத்தால். தணந்த பசி வருத்தம் - தணந்த - நீக்கிய; சிவயோகத்தின் நிலைத்த காரணத்தால் முன்னர்த் தம்மை அணையாது நீக்கிய என்பதாம். "பசி வந்திடப் பறந்துபோம்" என்ற உலகியல் நீதிக்கு மாறாக நீக்கிய என்க; "கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்துநான் கண்மூடி மவுனியாகித், தனியே யிருப்பதற் கெண்ணினேன்" (தாயுமானார்) என்று யோகிகள் பாலும் ஓரோர்கால் வந்து வருத்தம் செய்வது பசிநோய் என்று காட்டியநிலை காண்க; "பசிநோய் செய்த பறிதான்" "பாடுவார் பசிதீர்ப்பாய்" (நம்பி. தேவா.) என்று நம்பிகள் இதனை எடுத்துக் கூறுதல் காண்க. "வழி போம் பொழுது மிக விளைத்து வருத்த முறநீர் வேட்கையொடும், அழிவாம் பசிவந்தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே, மொழிவேந் தருமுன் னெழுந்தருள" (1569) என்ற அரசுகள் வரலாறும் காண்க; "ஓவா - தழுவான் பசித்தானென் றாங்கிறைவன் காட்டத், தொழுவான் றுயர் தீர்க்குந் தோகை....அப்ப, னருளாலே, யூட்டுதலும்" (ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை), "தாதையொடு வந்த வேதியச் சிறுவன், றளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த, வன்னா யோவென் றழைப்ப" (கழுமல மும்மணிக்கோவை - 1) என்று வரும் ஆளுடைய பிள்ளையார் வரலாறுகளும் கருதுக; (குறிப்பு - ஈண்டுக் குறித்த பசி வேறு என்பது.) திருவாயிற் புணர்ந்த மதிற் புறத்திருந்தார் - உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் கோயில் திருக்கதவம் திருக்காப்பிடும் நிலையும், அதன்பின் பசி முதலிய வேட்கையுடையோர் மற்றெவரும் திருக்கோயிலினுள்ளே தங்கலாகாத நிலையும் காரணமாக மதிற்புறத்தே திருவாயிலில் இருந்தனர் என்பதாம். முனைப்பாடிப் புரவலனார் - புரவலனாரேனும் என்று சிறப்பும்மை விரித்துரைத்துக் கொள்க; புரவலனாராயினும் தமக்குப் பசி வந்தடரும் நியதியின்பாற் படுவர் என்பதும், எவ்வுயிரினுள்ளும் உயிர்க்குயிராய் நிற்கும் இறைவர் அதனை அறிந்து ஊட்டினாலன்றி உயிர்கட்குச் செயலில்லை என்பதும், புரவலனார் என்று குறிப்பாகோடி, தொகுத்தார்க்குந் துய்த்த லரிது" (குறள்); ஈண்டு நம்பிகள் பரிசன முதலியனவாகிய அரசர் திருவெல்லா முடையாராயினும் பசியால் வருந்தியிருக்க நேர்ந்தது திருவருள் புலப்படுக்கும் நியதி. |
|
|