பாடல் எண் :3342

கைகள் கூப்பி முன்னணைவார் கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகவஞ்சி யாரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண் மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன்வீழ்ந்தார்.
188

(இ-ள்.) கைகள்...அணைவார் - கைகளை சிரமேற் கூப்பிக் கொண்டு திருமுன்பு அணைவாராகிய நம்பிகள்; கம்பையாறு....சேவடிக்கீழ் - கம்பை நதி பெருக்கெடுத்து வரக்கண்டு இறைவரது திருமேனிக்காக மிகவும் பயந்து தமது திருஉடம்பு நிறையத் தழுவிக்கொண்டிருந்த மை பொருந்திய கரிய நீண்ட கண்களையுடைய மலைமகளாகிய அம்மையார் நித்தமாக வழிபடுகின்ற செம்மையுடைய தாமரை போலும் சேவடிகளின் கீழே; திருந்து....வீழ்ந்தார் - திருந்தும் பெருவிருப்புடனே வீழ்ந்தனர்.
(வி-ரை.) முன் - திருமுன்பு; திருஏகம்பர் சந்நதியின் முன்பு.
அணைவார் வீழ்ந்தார் - என்று கூட்டி முடிக்க; அணைவார் - அணைவாராகிய நம்பிகள்; வினைப்பெயர்.
பெருகிவர ஐயர் தமக்கு மிக அஞ்சி - பெருகி வருதலால் இறைவர் திருமேனிக்கு வெள்ளத்தாற் பழுது நேரும் என அஞ்சி; ஐயர் தமக்கு - ஐயரது திருமேனிக்காக.
ஆரத் தழுவிக்கொண்டிருந்த - ஆர - நிறைய; முழுதும்.
தழுவிக்கொள்ளுதல் - வெள்ளத்தால் அலைக்கப்படாதபடி காக்கத் தாமே தழுவிக் காவலாக மறைத்துக் கொள்ளுதல்.
என்றும் வழிபாடு - சேவடி - உன் பூசை எப்போதும் நம்பால் முடிவதில்லை என்று பெருமான் அருளியபடி நித்தமாக நிகழும் பூசை; இவ்வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் (1134 - 1145) காண்க.