சீரார் காஞ்சி மன்னுதிருக் காமக் கோட்டஞ் சென்றிறைஞ்சி, நீரார் சடையா ரமர்ந்தருளு நீடு திருமேற் றளிமேவி ஆரா வன்பிற் பணிந்தேத்தி யளவி "னுந்தா வொண்சுட"ராம் பாரார் பெருமைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார். | 190 | (இ-ள்.) சீரார்...இறைஞ்சி - சிறப்புப் பொருந்திய திருக்காஞ்சி புரத்தில் நிலைபெற்ற திருக்காமக் கோட்டத்தில் அணைந்து பணிந்து; நீரார்...மேவி - கங்கையைச் சூடிய சடையினையுடைய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் நீடிய கச்சித் திருமேற்றளியினை அடைந்து; ஆரா....பரவினார் - நிறைவுபடாது பெருகும் அன்பினாலே பணிந்து துதித்து அளவற்ற பெருமையுடைய "நுந்தா வொண்சுடரே!" என்று தொடங்குகின்ற உலக நிறைந்த பெருமையுடைய திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை.) திருக்காமக் கோட்டஞ் சென்றிறைஞ்சி - "அறப்பெருஞ் செல்வக் காமக் கோட்ட மணைந்திறைஞ்சினார்" (2896) எனப் பிள்ளையார் வழிபட்டமை கூறியது காண்க. ஆண்டுரைத்தவை பார்க்க. சத்திபீடம். கச்சி எல்லையில் எல்லாக் கோயில்களுக்கும் இஃதொன்றே அம்மை ஆலயம். அம்மையாரது தவத்திற் குறிக்கொண்ட பொருளாய் இறைவர் இருத்தலில் இதுவும் "சடையா ராலயமா"யிற்று. திருமேற்றளி - திருஏகம்பத்தின் மேற்றிசையில் உள்ள தனிக்கோயில்; முன் உரைத்தவை பார்க்க. "நுந்தா ஒண்சுடர்" ஆம் திருப்பதிகம் - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. பதிகமே கெடாத ஒள்ளிய ஞானச் சுடராம் என்றதும் குறிப்பு. ஆரா அன்பு - குறையாத அன்பு; பாரார் பெருமை - உலகம் போற்றும் பெருமை. பணிந்தேத்தும் அளவில் - என்பதும் பாடம். |
|
|