பாடல் எண் :3346

அங்க ணமர்வா ரனேகதங்கா பதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண்விடையார் தமைப்பணிந்து "தேனெய்புரிந்"தென்றெடுத்ததமிழ்
"தங்கு மிடமா" மெனப்பாடித் தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப் புரிந்தப் பதியிற் பொருந்துநாள்;
192

(இ-ள்.) அங்கண் அமர்வார் - அப்பதியில் விரும்பி எழுந்தருளியிருப்பவராகிய நம்பிகள்; அனேகதங்காபத்தை...தாழ்ந்து - திருக்கச்சி அனேகதங் காபதத்தினைச் சேர்ந்து திருக்கோயிலினுள்ளே அணைந்து சிவந்த கண்ணையுடைய இடபத்தை உடையாராகிய இறைவரை வணங்கித் "தேனெய் புரிந்து" என்று தொடங்கிய திருப்பதிகத்தினை "இறைவர் தங்குமிடமா மிது" என்ற கருத்துப் போதப் பாடியருளி வணங்கி; பிறவும்...போற்றி - இறைவரது தானங்கள் பிறவற்றையும் மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்புடன் சென்று துதித்து; புரிந்து...பொருந்தும் நாள் - இடைவிடாத நினைவுடனே அந்தக் கச்சித் திருப்பதியிலே பொருந்த வீற்றிருக்கும் நாள்களில்.
(வி-ரை.) அங்கண் - கச்சிமா நகரத்திலே; அனேகதங்காபதம் - இது திருக்கச்சி அனேகதங் காபதம் என்ற தலம்; வடநாட்டில் உள்ள இப்பெயர் கொண்ட பதியுடன் மயங்கற்பாலதன்று; "கச்சி யனேகதங்காபதமே" என்ற பதிக மகுடம் பார்க்க.
"தேனெய் புரிந்து" என்றெடுத்த தமிழ் - இப்பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; எடுத்த - தொடங்கிய.
"தங்குமிடமாம்" எனப் பாடி - இப்பதிகக்கருத்தும் குறிப்புமாம்; எம்பெருமானதிடம் - எரியாடியிடம் என்பன வாதியாகப் பதிகப் பாட்டுக்களில் வருவன காண்க; இறைவரது "இடம் திருக்கச்சி யனேகதங்காபதமே" என்பது.
பிறவும்...போற்றி - இவை கச்சி யெல்லையில் உள்ளஅளவில்லாத தானங்கள். பதிகள்; தானங்கள் - கச்சிப் பதியில் உள்ள தனிப் பதிகளின் பெயர் வழக்குப் பார்க்க. காஞ்சித்தானம், இறவாத்தானம், முதலியவை காண்க; "இறைவர் தாமகிழ்ந் தருளிய பதிக ளெண்ணி றந்தவத் திருநக ரெல்லை" (1153) என்றது பார்க்க.
அப்பதி - திருக்கச்சிப்பதி; பொருந்தும் - விரும்பி அமர்ந்த.
பொருந்துநாள் - அமர்கின்றார் - வந்தடைந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.