பாடல் எண் :3348

செல்வ மல்கு திருப்பனங்காட் டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்ல லறுக்கு மருமருந்தை வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்க நின்று "விடையின்மேல் வருவா" ரெனும்வண்டமிழ்ப்பதிகம்
நல்ல விசையி னுடன்பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்,
194

(இ-ள்.) செல்வ மல்கு...வணங்கி - செல்வம் நிறைந்த திருப்பனங்காட்டூரிலே எழுந்தருளிய செம்பொன் போன்ற ஒளியுடைய செழுஞ்சுடரைப், பிறவித் துன்பத்தினை அறுக்கும் அரிய மருந்துபோல்பவரைப் பணிந்து; அன்பு....நின்று - அன்பு மேலீட்டினாலே பொழியும் கண்ணீர் பெருக நின்று; விடையின் மேல்...பாடி - "விடையின்மேல் வருவானை" என்று தொடங்கும் வன்மையுடைய பதிகத்தினை நல்ல இசை பொருந்தப் பாடி; போந்து புறம்பு நண்ணுவார் - புறம்பு போந்து சேர்வாராகி,
(வி-ரை.) செல்வம் - அருட் செல்வம்; திருப்பனங்காட்டூர் - திருவன்பார்த்தான் பனங்காட்டூர்.
செம்பொற் செழுஞ்சுடர் - செம்பொன் போன்ற செழிய சுடர் போன்றவர்.
அல்லல் - துன்பங்களுள் எல்லாம் மிக்க கொடுமையுடைய பிறவித் துன்பம்; மருந்து - மருந்து போன்றாரை மருந்தென்ற துபசாரம்.
அன்பு பொழி - அன்பு காரணமாக வருகின்ற; "அன்பிற்கு முண்டோ வடைக்குந் தாழ்" (குறள்).
"விடையின்மேல் வருவான்" இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
வண் தமிழ்ப் பதிகம் - வண்மையாவது சிறந்த உறுதிப் பொருள் பயத்தல். சாராதார் சார்வென்னே - உணராதார் உணர்வென்னே - அறியாதார் அறிவென்னே - என்பன முதலிய உறுதிப் பொருள்களை உணர்த்துதல் காண்க.
நல்ல இசை - பதிகப் பண்ணாகிய இனிய சீகாமரப் பண்.
செல்வச் செழுஞ்சுடர் - பிறவும் நண்ணுவார் - என்பனவும் பாடங்கள்.