பாடல் எண் :3357

வானை யளக்குங் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனலிளவெண்பிறைச்சடையார்கோயில்வலங்கொண்டெதிர்குறுகி
ஊனு முயிருங் கரைந்துருக வுச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன்வீழ்ந்தா ராரா வன்பி னாரூரர்.
203

(இ-ள்.) வானை அளக்கும்....புகுந்து - ஆகாயத்தை அளப்பதுபோல நீண்டு மேலுயர்ந்த திருக்கோபுரத்தை மகிழ்ச்சியுடனே நிலமுற வீழ்ந்து வணங்கி உள்ளே புகுந்து; வளர்....எதிர்குறுகி - வளர்கின்ற வளைந்த இளைய வெள்ளிய பிறையினைச் சூடிய சடையினை உடைய இறைவரது திருக்கோயிலினுள்ளே திருமாளிகையினை வலமாக வந்து இறைவரது திருமுன்பு சார்ந்து; ஆரா அன்பின் ஆரூரர் - நிறைவு படாத பேரன்பின் பெருக்கினாலே நம்பியாரூரர்; ஊனுமுயிரும்....வீழ்ந்தார் - ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சியின்மேற் கூப்பிய கையினுடனே விளைந்த பெருவிப்பினோடும் நிலமுற வீழ்ந்தனர்.
(வி-ரை.) அளத்தல் - அளப்பதுபோல் உயர்தல்; தற்குறிப்பேற்றம்.
வளர் கூனல் - இள - வெண் - பிறை - வளர் - வளரும் தன்மை பெற்ற; கூனல் - வளைவுடைய; குறை நோயினால் உள்ளுடைந்து கூனியது போலும் என்றது குறிப்பு; கூன் - நல் என்று பிரித்து வளைவுடையதாயினும் நல்ல என்றலுமாம்; இளமை - இனிக் கலைபெற்று முதிரவுள்ள தன்மையும் புதிதின் தோன்றியமையும் குறித்தது; வெண்மை - மறைவு பெற்ற இருளினின்றும் நீங்கி விளங்கும் வெள்ளிய கோலம்.
எதிர் - திருமுன்பு.
ஊனும் உயிரும் கரைந்து உருக - ஊண் உருகுதல் - அன்பின் விளைவாகிய மெய்ப்பாடு;
உயிர் உருகுதல் - அன்பின் விளைவாகிய நிலை.
ஆனகாதல் - ஆதல் - விளைதல்; கூர்தல்.
வீழ்ந்தார் - காதல் தள்ளியதுபோல நிலமிசை விழுந்து பணிந்தார்.
அன்பின் வீழ்ந்தார் - அன்பினால் விழுந்தார் என்று கூட்டுக. அன்பினையுடைய ஆரூரர் என்று கூட்டினுமமையும். முன்பாட்டிற்போல ஈண்டும் பயனிலை முன் வந்தது ஆர்வத்தானாகிய விரைவுக் குறிப்பு.