கோவா முத்துஞ் சுரும்பேறாக் கொழுமென் முகையு மனையாரைச் சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தைநிறை காவா தவர்பாற் போய்வீழத் தம்பாற் காம னார்துரந்த பூவா ளிகள்வந் துறவீழத், தரியார் புறமே போந்துரைப்பார். | 227 | (இ-ள்.) கோவா...அனையாரை - கோக்கப்படாத முத்தினையும், வண்டுகள் மொய்த்துண்ணாத கொழுவிய மெல்லியஅரும்பினையும் போன்றாராகிய அவ்வம்மையாரை; சேவார்...கண்டபோது - இடபம்பொருந்திய கொடியினையுடைய இறைவரது திருத்தொண்டராகிய நம்பிகள் கண்டபொழுது; சிந்தை...வீழ - தமது மனம் நிறையினாற் காக்கப் பெறாமல் அவர்பாற் போய் வீழவும்; தம்பால்....உறவீழ - தம்மிடத்து மன்மதன் விட்ட மலரம்புகள் வந்து உற வீழவும்; தரியார்....உரைப்பார் - ஆற்றமாட்டாதவராய்ப் புறம்போந்து சொல்வாராகி, (வி-ரை.) கோவா....அனையார் - சங்கிலியம்மையார்; கோவாமுத்து - முத்து இப்பிகள் - மூங்கில் முதலிய எந்தப் பிறப்பிடத்தினின்று பிறந்தாலும், பிறந்தபோது தொளையின்றி இயல்பாகிய ஒளிவீசி முழுமையாய் நிற்கும். அதன் பின்னரே தொளையிட்டுக் கோத்து மாலையாக்கி மக்கள் அணிகுவர்; கோவா (கோக்கப்படாத) என்றதனாலும் பிறரால் விரும்பி அணியப்படாத என்றவாறாம். சுரும்பு ஏறுக் கொழுமென் முகை - வண்டுகள் மொய்த்து உண்ணாத கொழுவிய மெல்லிய அரும்பு. கொழுமுகை - என்றதனால் அணிமையில் அலர்ந்து மணந்தரும் பருவம் குறித்தபடி; சுரும்பு ஏறா - என்றது பிறரால் மணநுகரப் படாமை குறித்தது; இவையிரண்டும் சங்கிலியாரது பெண்தண்மை நிறைந்த பருவமும் ஆயின், இன்னும் மணஞ் செய்யப்பெறாத கன்னியராம் நிலையும் குறித்தன; - இவ்வாறன்றி இவை, சங்கிலியாரின் தூய்மை குறித்தன என்பாருமுண்டு. இவ்வொருபொருட்டு இரண்டு உவமைகள் கூறியது என்னையோ? எனிற் கூறுதும்:- முத்து - "தொடுகடன் முத்தும்...எங்கும் - விரும்பினர்பாற் சென்று மெய்க்கணியாம்" (திருக்கோவை - 248) என்றபடி சென்று பிறர் மெய்க்கணி யாகாநிலை குறித்து நின்றது. கொழுமுகை - தான் இருக்குமிடத்து வண்டு தேடிவந்து மணநுகர்ந்து அலர்த்தித் தேனுண்ணும் நிலை போல, இங்குப் பிறன் எவனும் மணந்த நிலையின்மை குறித்து நின்றது; எனவே அம்மையார் மனம் சென்று பிறர்க்குரிமை யாகாமையும், அம்மையார்பாற் பிறர் மனம் வந்து புகாமையும் ஆகிய நிலைகளுக்கு உவமையாயின; முத்து - தீட்டுதல் வேண்டாத இயல்பாகிய பிறப்பும் ஒளியும் குறித்தது; முகை - மணம் குறித்தது; மெய்யும் வினையும்பற்றி எழுந்த உவமைகள். சுரும்பு ஏறாக் கொழுமென்முகை - ஈண்டு, முன்னர், ஒருவன் பரிசறியான் அம்மையாரது பெற்றோர்பால் மகட்பேசிய நிலையுளதே? எனின்; அஃது இருபாலினுமன்றி, ஒருபால் நிகழ்ந்த செயலாதலின் ஒன்றும் பயனிலதாய் வீணாயொழிந்தது என்க; கணக்கில் வாராதென்றொழிக; "எந்தையுமெம் மனையுமவர்க்கெனைக் கொடுக்க விசைந்தார்கள், அந்தமுறை யாலவர்க்கே யுரியதுநான்" (1297) என்ற திலகவதியம்மையார் வரலாற்றின் நுட்பத்தினை ஈண்டுவைத்து நோக்கி வேற்றுமை கண்டு கொள்க. பெற்றோர் பேசிய மணப்பேச்சுக் கேட்ட அளவிலே அம்மையார் அது தம்பாற் சாராது விலக்கித் தாம் அருள் செய்தார் ஒருவருக்கு முன்னரே உரிமைப்பட்டவராய் நின்ற நிலையை உணர்த்தி விட்டமையும் காண்க. அதன் பின்னர்ப் பரிசறியான் மகட்பேசவிட்ட வார்த்தை பெற்றவர்கள்பாலன்றி அம்மையார்பாற் சாராமையானும், அது கேட்ட பெற்றோர் மனத்தின்பாலும்அது உட்புகாமையானும் அஃது ஈண்டைக்கு எண்ணவரும் பொருளன்றென்று விடுக்க; "தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபாற், புகுமணக் காதலினால்...அருளாலிவ் வியனுலக, நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்தான்" (திருத்தொண்டர் திருவந்தாதி - 69) - என்றது நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கு; ஈண்டு, "மகட்பேசினோன் வீயவே நூல்போன" என்றது நூலிழந்தநிலை குறிக்குமென்று கொண்டு, நம்பிகள் செயல், தாம் தாம் கொண்டொழுகும் அறுதலிமணம் முதலிய கோட்டிகளுக்கு ஆதரவாகக்கூறிப் பிணங்குவாருமுளர்; இதுபற்றி வாக்குவாதங்களும் பூசல்களும் தமிழறிந்தாரென்பவரிடை அணிமையில் மிகவும் நிகழ்ந்தன; இவை பொருந்தாமை முன் உரைக்கப்பட்டது; நூல்போன - நூல்போன என்று உலகவர் பிழைபடக்கூறும் என்க. நூற்றுறை போகிய என்ற குறிப்புடனும் நின்றது. உலகநகும் வழக்கே நன்மையா - என்றது பரிசறியா உலகம் பழிச்சுதலை ஒரு பொருளாகக் கொள்ளாது நன்மையாம்படி என்றதாம். "நாடவர் பழித்துரை பூணது வாக" (திருவா) "நாடவர் நந்தம்மை யார்ப்பவார்ப்ப, நாமு மவர் தம்மை யார்ப்ப வார்ப்ப" (திருவா). கோவா முத்தும் - சுரும்பேறா முகையும் அனையாரை - மணஞ் செய்யப் பெறாத கன்னிகையார் என்று குளித்தபடியாம்; என்னை? நம்பிகளது செந்நெறி நிற்கும் திருவுள்ளம் பிறிதுவழியிற் செல்லாமை குறித்தற்கு எடுத்துக்காட்டியவாறு; இனிப், பெண்களைக் காமத்தோடு நோக்குதலும் எண்ணுதலும் திருக்கோயிற் குற்றங்களாம் என்று சிவாகமங்கள் விதித்திருப்பவும் பரமாசாரியராகிய நம்பிகள்பால் இவ்வாறு நிகழ்ந்த தென்னையோ? என்னின், அது முந்தை விதிப்பயனாகிய ஊழ்கூட்ட ஆகியது என்பதாம். "முந்தை விதியால்" (3378); "விதியாற் கண்ணுற்றார்" (3380); "சிந்தைநிறை காவாது" (3381) என்றனவும்; "என்னை யுள்ளந் திரிவித்தாள்" (3382); "ஆளாம் விதியால் வாழு மெனைவருந்தித், தன்னா ரருளால் வரும்பேறு தவத்தா லணையா வகைதடுத்தே" (3384) என்பனவும், பிறவும், முன்னுரைத்தனவும், பின் நிகழ்ச்சிகளும் கண்டு கொள்க. <>கண்டபோது - "விதியாற் கண்ணுற்றார்" (3380) என்றபடி கண்டபோது. சிந்தை நிறை காவாது - சிந்தையானது நிறையினாற் காக்கப்படாமல். போய்வீழ - சென்று விருப்பத்தினுள் அழுந்த; வீழ - இகழ்ச்சிக்குறிப்பும் பட நின்றது. வீழ்தல் - விரும்புதல்; "தாம் வீழ்வார்" (குறள்) சிந்தை போய்வீழ் - என்றும், வாளிகள் - வந்துற வீழ - என்றும் வரும் கவிநயம் காண்க; ஒன்று போகவும் மற்றொன்றுஅதனிடத்தில் வரவுமாக இவ்வாறாம் நிகழ்வு என்றதும், போய் என்றது வந்து என்றதும் கவிநலம்; வாளிகள் வந்து உறவீழ - இங்கு வீழ என்றது ஊறு செய்யாது கீழே வீழ என்ற குறிப்புப்பட நின்றது; என்னை? நம்பிகள்பால் மேல் நிகழ்வன காமன் வயப்பட்ட காமச் சேட்டைகளாகாது சிவபெருமானது திருவருள் வழியே ஊழ்வினையின் விளைவாக நிகழ்வனவாம் என்க. தரியார் - தரியாராகி; உரைப்பார் - உரைப்பாராய். உரைப்பார் - இயம்புதலும் (3382) - நின்றார் - விளம்புவார் - என்ன - என - மருண்டார் (3383) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிபுகொள்க. |
|
|