தோற்றும் பொழுதிற் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் ஆற்ற வன்பு பொங்கியெழுந் "தடியே னுய்ய வெழுந்தருளும் பேற்றுக்கென்யான்செய்வ?" தெனப், பெரிய கருணைபொழிந்தனைய நீற்றுக் கோல வேதியரு நேர்நின் றருளிச் செய்கின்றார், | 238 | (இ-ள்.) தோற்றும்...எழுந்து - அவ்வாறு இறைவர் தமது கனாவிலே தோன்றக் கண்டபொழுது சங்கிலியார் தொழுது நிலமுறவிழுந்து பரவசராகி மிகவும் அன்பு வெள்ளமாகப் பொங்கி நிகழ எழுந்து; அடியேன்....என - அடியேன் உய்யும் பொருட்டுத் தேவரீர் எழுந்தருளி வரப்பெற்ற பெரும் பேற்றுக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன் என்று துதிக்க; பெரிய...அருளிச்செய்கின்றார் - பெரிய கருணையே மேலே பொழிந்தாற் போல விளங்கும் திருநீற்றுக் கோலத்தினை உடைய வேதியராகித் தோன்றிய இறைவரும் நேரே நின்று சொல்லியருள்கின்றாராகி; (வி-ரை.) தோற்றும்பொழுது....என - இந்நிகழ்ச்சிகளும் மேல் (3393 - 3396; 3405 - 3407;) வருவனவும் சங்கிலியார்பாற் கனாநிலையில் நிகழ்ந்தவை; மேல் "எய்தியபே ரதிசயத்தா லுணர்ந்து எழுந்து" (3407) என்பது காண்க. "அடியேனுய்ய எழுந்தருளும் பேற்றுக்கு என் யான் செய்வது?" என - இது சங்கிலியார் கனாவிற்கண்ட இறைவரை நோக்கிக் கூறியது; யான் என் செய்வது என்க. கைம்மாறு என்பது சொல்லெச்சம்; "எதிர் செய்குறை யென் கொல்?" (1338). கருணை பொழிந்தனைய நீற்றுக்கோல வேதியர் - இஃது இறைவர் காட்சிதந்த கோலம்; ஆளுடைய அரசுகளுக்குத் திருமறைக் காட்டிலும் (1541) திருக்கயிலையிலும் (1628), நம்பிகளுக்குத் திருவெண்ணெய் நல்லூரிலும், திருவாதவூரடிகளுக்குத் திருப்பெருந் துறையிலும் நனாவிற் காட்டிய திருக்கோலங்கள் இங்கு நினைவு கூர்தற் பாலன. இஃது அவருக்குக் கைவந்த பழங்கோலம் போலும், கருணைபொழிந்தனைய நீற்றுக் கோலம் - திருநீற்றின் பொலிவு, உள்ளிருக்கும் உருக்காணாத பெருங்கருணை பொங்கி யிடங்கொள்ளாது மேலே பொங்கி வழிவது போலிருந்தது என்பதாம். வெண்மை அருளாகிய சத்துவத்தின் நிறம் என்ப. உருவும் பயனும் பற்றிவந்த உவமம். பொழிகின்ற - என்பதும் பாடம். |
|
|