வெண்மதியின் கொழுந்தணிந்த வீதிவிடங் கப்பெருமாள் ஒண்ணுதலார் புடைபரந்த வோலக்க மதனிடையே பண்ணமரு மொழிப்பரவை யார்பாட லாடறனைக் கண்ணுறமுன் கண்டுகேட் டார்போலக் கருதினார். | 271 | (இ-ள்.) வெண்மதியின்.....அதனிடையே - வெள்ளிய மதியின் கொழுந்தாகிய பிறைச்சந்திரனை அணிந்த வீதிவிடங்கப் பெருமானதுஅழகிய நெற்றியை உடைய பெண்கள் பக்கங்களிற் பரவிச் சூழ்ந்த திருவோலக்கத்தின்கண்; பண்அமரும்...ஆடல்தனை - பண்ணினீர்மை பொருந்திய மொழியினையுடைய பரவையம்மையாரது பாடலினையும் ஆடலினையும் முறையே; கண்ணுற....கருதினார் - நேரே கண்களிற் பொருந்தக் காணவும் கேட்கவும் பெற்றனர்போலவே கருதினர் (நம்பிகள்). (வி-ரை.) வீதிவிடங்கப் பெருமாள் - தியாகேசர்; இப்பெயரின் பொருளும் வரலாறும் பற்றித் (130) திருவாரூர்த் திருநகரச் சிறப்புப் பார்க்க. ஒண்ணுதலார் புடைபரந்த ஓலக்கம் - பெண்கள் பக்கங்களிலெல்லாம் பரவிச் சூழக் கொலு வீற்றிருக்கும் நிலை; "பத்தர்க ளோடு பாவையர் சூழ" (அரசு. ஆரூர். குறிஞ்சி); இப்பெண்கள் கும்பிட வந்தாரும் ஆடல்பாடல்களியற்றி உபசரிப்பாருமாம். ஓலக்கம் - கொலு வீற்றிருக்கும் நிலை. கொலுமண்டபமுமாம். பண் அமரும் மொழ - பண்ணின் நீர்மை இயல்பாகவே அமைந்த மொழியினையுடைய; பாடல் தனையும் ஆடல்தனையும் - என்று தனை என்பதை இரண்டிடத்தும் தனித்தனிக் கூட்டியும் எண்ணும்மை விரித்தும் உரைத்துக் கொள்க. ஆடல் தனைக் கண்டு பாடல்தனைக் கேட்டார் - என்று எதிர் நிரனிறையாகக் கூட்டிக்கொள்க; ஆடலுடன் பாடல் ஒருசேர நிகழ்தலினால் தனை என ஒருமையாற் கூறியும், அதனை ஓரிடத்துக் கூட்டியும், ஒருவினை கொண்டு முடித்தும் வைத்தருளினார். இற்றைநாட் பேசும்படக் காட்சி அமைப்பினை நினைவுகூர்க. கண்ணுற முன் - அகக்கண்ணினாலே யன்றிப் புறக்கண்ணாலும் முன் பொருந்த என்பது. போலக் கருதினார் - கருத்தில் ஊன்றிய நோக்கினாலே அக்காட்சி புறக்காட்சி நிகழ்ந்தது போலவே யிருந்தது; உருவெளிப்பாடு முதலிய அகப்பொருட்டுறைகள் காண்க. மேல் இதனைத் தொடர்ந்து பிரிவாற்றா நிலையில் அருளும் திருப்பதிகமும், அதனை ஆசிரியரது "மிக நினைந்து ஏசறவாய்" என்று விளக்கியருளும் நிலையும் காண்க. "எத்தனைநாள் பிரிந்திருக்கே னென்னாரூ ரிறைவனையே" (தேவா). கண்டுகொண்டார் - என்பதும் பாடம். |
|
|