பாடல் எண் :3436

அங்கணர்தம் பதியதனை யகன்றுபோ யன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ் பழையனூ ருழையெய்தித்
தங்குவா ரம்மைதிருத் தலையாலே வலங்கொள்ளுந்
திங்கண்முடி யாராடுந் திருவாலங் காட்டினயல்,
282

(இ-ள்.) அங்கணர்....போய் - அங்கண்மை யுடையாராம் இறைவரது அத்திருப்பதியினை நீங்கிச் சென்று; அன்பருடன்...எய்தி - அன்பர்களுடனே கூடி மேற்சென்று தாமரைகள் மலர்தற்கிடமாகிய தடங்களும் பணைகளும்சூழ்ந்த பழையனூரின்கண்ணே சேர்ந்து; அம்மை திருத்தலையாலே....அயல் - காரைக்காலம்மையார் திருத்தலையினாலே வந்து வலங்கொண்டருளும், சந்திரனை முடியிற்சூடிய இறைவர் திருக்கூத்தாடும் திருவாலங்காட்டின் பக்கத்து; தங்குவார் - தங்குவாராகி,
(வி-ரை) பழயனூருழை - பழயனூரின்கண்; உழை-ஏழனுருபு எய்தி - சேர்ந்து; பழயனூரும் திருவாலங்காடும் ஒரு பகுதியாகிய ஒன்று சேர்த்துப் பாடப்பெறுவன; 1606 - 2909 பாட்டுக்களும் ழுபழனையுடையார்தாமேழு (அரசு-தாண்) ழுபழயனூராலங்காட்டெம்மடிகளேழு (பிள்) என்ற தேவாரங்களும் பார்க்க.நம்பிகளும் ழுபழயனூர் மேய ஆலங்காடாழு கன்பதும் காண்க
தங்குவார்....திருவாலங்காட்டின் அயல் - பழயனூரினை எய்திய நம்பிகள்அங்குத் தங்காது, மேற்சென்று அணிமையில் உள்ள திருவாலங்காட்டினை நோக்கிச்சென்று அதனுள்ளும் சென்று சேராது, அதன் அயலில் - (அருகாக) ஓரிடத்தில் தங்குவாராகி என்றபடி; திருவாலங்காட்டிற் சேராமைக்குக் காரணம் அம்மை திருத்தலையாலே வலங்கொள்ளும் பெருமை பற்றி என்பார் உடம்பொடு புணர்த்தி ஓதியருளினார். இத்தன்மையினை முன்னர், ஆளுடைய பிள்ளையார் இப்பதியினுட் சேராது புறத்துத்தங்கிய சரிதநிகழ்ச்சிபற்றி அங்கு விரித்து விளக்கினாராதலின், ஈண்டுச் சுருக்கிச் சுட்டினமட்டி லமைந்தார். 2905 - 2909 பாட்டுக்களும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அம்மை - காரைக்காலம்மையார்; இவ்வாறு அம்மை என்ற மட்டில் கூறியமைவது சைவமரபு; அவரது அளக்கலாகாப் பெருமைபற்றி அவர் பெயரைத் தானும் சொல்லாது அம்மை - எனப் போற்றும் மரபு காட்டப்பட்டது காண்க; முன்னர் "இம்மையிலே புவியிலுள்ளோர் யாருங்காண வேழுலகும் போற்றிசைப்ப வெம்மை யாளு மம்மைதிருத் தலையாலே நடந்து போற்று மம்மையப்பர் திருவாலங்காடாம்" (2907) என்று அருளிக் காட்டிவிட்ட படியால் ஆசிரியர் ஈண்டு அம்மை என்ற மட்டில் அமைத்துக் கூறியமைந்த மரபும் திறமும் கவிநலமும் காண்க. அம்மை மூத்ததிருப்பதிகம் என்ற பெயர்வழக்கும் காண்க. இம்மரபினை ஒட்டியே "‘அறிவானுந் தானே யறிவிப்பான் றானே' என்றோதிய அம்மை ‘அறிவா யறிகின்றான்றானே' எனவு மோதியதூஉ மென்க" என்று எமது மாதவச் சிவஞான முனிவர் சிற்றுரையில் கூறிப்போந்தனர் (போதம் - சூத் 11.)
திருத்தலையாலே வலங் கொண்ட வரலாறு அம்மையார் புராணத்துட் காண்க. (1778); வலங்கொண்ட என்னாது வலங்கொள்ளும் - என்றது இன்றும் அங்கு அம்மை இறைவர் திருவடிக்கீழ்ப் பாடிக்கொண்டு ஆனந்தஞ் சேர்ந்தெழுந்தருளி யிருக்கின்ற நிலை குறித்தற்கு.
திங்கள் முடியார் ஆடும் - ஊர்த்துவ தாண்டவம் என்னும் திருவடியை மேலே உயரத்தூக்கி அண்டமுற நிமிர்ந்தாடும் திருக்கூத்தை இயற்றியருளி; ஆடுதல் நித்தியமாய் நிகழ்தலின் ஆடும் என்றார். இத்தலம் இரத்தின சபை எனப்படும்; இறைவரது ஐம்பெருமன்றுகளில் ஒன்று. தலவிசேடம் III - பக். 579 பார்க்க.