தேனிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில் ஊனில்வள ருயிர்க்கெல்லா மொழியாத கருணையினால் ஆனதிரு வறம்புரக்கு மம்மைதிருக் கோயிலின்முன் வானில்வளர் திருவாயில் வணங்கினார் வன்றொண்டர். | 284 | (இ-ள்.) தேன்நிலவு....கோட்டத்தில் - தேன் வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கச்சிக் காமகோட்டத்தில்; ஊனில்வளர்....திருக்கோயிலின் முன் -ஊன்பொருந்த வந்து வளரும் எல்லா உயிர்களிடத்தும் கொண்ட நீங்காத கருணையினாலே ஆயின தருமங்களை எல்லாம் வளர்த்து அருளுகின்ற காமாட்சி யம்மையாரது திருக்கோயிலின் முன்பு; வானில்...வன்றொண்டர் - ஆகாயத்தில் உயர்ந்த திருவாயிலின் முன் றொண்டராகிய நம்பிகள் வணங்கினார். (வி-ரை.) திருக்காமக் கோட்டம் - காமாட்சி அம்மையார் தவஞ் செய்து அறம் வளர்க்கும் வளைவுட்பட்ட இடம். "புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்" (1148). ஊனில்...அறம்புரக்கும் அம்மை - காமாட்சியம்மையார்; இவ்வரலாறு முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் கூறப்பட்டது காண்க. ஊனில் வளர் உயிர்க்கெல்லாம் - சிருட்டியில் வந்த பலபல திறப்பட்ட பக்குவமுடைய உயிர்களுக்கெல்லாம் - அவ்வவற்றின் தன்மைக் கேற்ப. அம்மை திருக்கோயிலின் முன் - வாயில் - வணங்கினார் - எல்லாவுயிர்களுக்கும் ஒப்பக் கருணைபுரிந்து அறம் வளர்க்கின்றாராதலின் அவரது திருவருளை முதலில் நாடி வணங்கி நம்பிகள் பெற்றனர் என்க. ஆளுடைய பிள்ளையாரும் இங்கு வணங்கியமை முன் உரைக்கப்பட்டது (2897); வாயில் - கண்ணொளி யிழந்த நிலையாதலின் வாயிலினின்றவாறே வணங்கினர் என்க. ஊனில்வளர்...அறம்புரக்கும் அம்மை- எண்ணிறந்த உயிர்த்தொகுதியுள் சிருட்டிக்குள்ளாக எடுக்கப்படும் உயிர்களைப் புவனபோகங்களைத்தந்து வளர்த்தல் அம்மையின் கருணைத் தொழில், ஆயின் அப்பனது தொழில், காத்தலுடன் அழித்தலும் மீள ஆக்கலும் முதலிய ஐந்தொழில்களுமாம் என்று உலகம் முழுதும்அளித்தழித்தாக்கும் என மேற்பாட்டிற் கூறும் கருத்தினை உன்னுக; மேல் முதல்வர் என்ற கருத்தும் காண்க. ஆயின் அத்தொழில்களுள்ளும் அவ்வத் தொழிலுக் கேற்பச் சிவ சத்தியும் விளங்குவதாம் என்க. |
|
|