தொழுதுவிழுந் தெழுந்தருளாற் றுதித்துப்போய்த் தொல்லுலகம் முழுதுமளித் தழித்தாக்கு முதல்வர்திரு வேகம்பம் பழுதிலடி யார்முன்பு புகப்புக்குப் பணிகின்றார் "இழுதையேன் றிருமுன்பே யென்மொழிவே" னென்றிறைஞ்சி, | 285 | (இ-ள்.) தொழுது...போய் - தொழுது நிலமுற விழுந்து - எழுந்து அருளினாலே துதிசெய்து மேற்சென்று; தொல்லுலகம்....புகப்புக்கு - பழமையாகிய உலகங்களை எல்லாம் காத்தும் அழித்தும் மீளப்படைத்தும் ஐந்தொழில் செய்யும் முதல்வருடைய திருவேகம்பத்தினுள்ளே குற்றமில்லாத அடியார்கள் முன்னேபுகத் தாம் அவர் பின்னே சென்று புகுந்து; பணிகின்றார் - வணங்குகின்றவராகி; இழுதையேன்....என்று இறைஞ்சி - பொய்யனாகிய நான் தேவரீரது திருமுன்பு நின்று என்ன சொல்வேன்! என்று வணங்கி, (வி-ரை.) தொழுது...போய் - இது திருக்காமக் கோட்டத்திற் செய்த வழிபாடு. அருளால் துதித்து - இறைவரை வணங்குதற்கும் அவரருள் வேண்டும் என்பதாம்; "அவனருளாலே அவன்றாள் வணங்கி" (திருவாசகம்); இனி, ஏனைய பதிகளில் இறைவரை முன்னர் வணங்கிப் பின்னரேஅவ்வழிபாட்டின் றொடர்ச்சியாக இறைவியை வழிபடுதல் வழக்கும் விதி மரபுமாய் நிகழ்ந்தன; மேலும் சிவபெருமானைப் பற்றியன்றி வேறொருவரையும் வணங்காத நியமமுடையவர்கள் எந்தம் பெருமக்களாகிய பரமாசாரியர்கள்; ஈண்டு நம்பிகள் அம்மையாரைத் தனியாக முன்னர் வணங்கினர்; அது அவருக்குக் கண் கொடுத்தற் கேதுவாகத் திருவருளால், நிகழ்ந்த தென்பதுமாம்; "ஊனில்வள ருயிர்க்கெல்லா மொழியாத கருணையினால் ஆனதிரு வறம்புரக்கு மம்மை" என்ற குறிப்புமிது. "நீடு காமங்களவாவர்க் கருளி (1153) என்று இறைவரையும் அதன்முன் மனையறம் புரக்குங் கருணையினால், நண்ணு மன்னுயிர் யாவையும் பல்க" (1148) என்று அம்மையாரையும் கூறிய தன்மைகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. "மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த விடக்கண் கொடுத்தார்" (3441) என்று இக்குறிப்பினை மேல் வரும்பாட்டிற் காட்டுதலும் காண்க. தொல்லுலகம்...முதல்வர் - அளித்தல் - காத்தல் அளித்தலை முதலில் வைத்த குறிப்பு அம்மையாரது கருணையிடமாக இருந்து ஈண்டியற்றும் தொழிற் சிறப்பு. திரு ஏகம்பம் - இறைவர் கோயில். காமாட்சிஅம்மையார் எழுந்தருளிய திருக்காமக்கோட்டம் வேறாகத் தனிக் கோயிலாகவும், இறைவர் எழுந்தருளிய திருவேகம்பம் வேறு தனிக்கோயிலாகவும் உள்ளன; வரலாறுகள் முன்னர்த் திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணத்துட் கூறப்பட்டன. இரண்டிற்கு மிடையே ? நாழிகையளவு இடை உண்டு. பழுதில் அடியார் முன்பு புகப் புக்கு பழுதில்அடியார் என்றது இழுதையேன் என்று நம்பிகள் தம்மை உட்கொண்டு கூறியமையால் அவ்வாறு ஏதும் பழுதில்லாதவர்கள் என்று அவர்கொண்ட கருத்து; நம்பிகளை உடன் கொண்டு முன்செல்லும் பேறு பெற்றவர்கள் என்ற குறிப்புமாம். பழுதினை இல்லையாகச் செய்யும் என்றலுமாம்; முன்பு புகப்புக்கு - கண்காணாமையால் அடியார்கள் வழிகாட்டி முன்னே செல்லத் தாம் அவர்கள் பின் சென்று; அடியார்களைப் பின்பற்றிச் செல்லும் முறைப்படி என்ற குறிப்புமாம். திருத்தொண்டத்தொகை யருளியவராதலின் என்ற கருத்தும் காண்க. இக்கருத்தினையே தொடர்ந்து மேல், திருவாரூரிலும் "திருத்தொண்டர் விரவுவா ருடன்கூடி - இடை தெரிந்து....அணைந்தார்" (3458) என்பதும் கருதுக. சிவஞான போதம் 12ம் சூத்திரக் கருத்தும் காண்க. பணிகின்றார் - இறைஞ்சி - என - வீழ்ந்து வணங்கினார் எனமேற் பாட்டுடன் கூட்டி முடிக்க. பணிகின்றார் - முற்றெச்சம் - பணிகின்றாராகி. இழுதையேன் - இழுதை - பொய்; அறியாமை என்றலுமாம்; இழுதை - பேய் என்று கொண்டு பேயனேன் என்றுரைப்பாரு முண்டு. இழுதையேன்...என்மொழிவேன் - பொய்யனாதலின் தேவரீரது திருமுன்பு நின்று ஏதும் சொல்லத் தகுதியுள்ளனல்லேன், என்று காரணக் குறிப்புப் படக்கூறியபடி; "தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், றன்னெஞ்சே தன்னைச் சுடும்" (குறள்)- தாம்செய்த பொய்யினையும் தாம் வேண்டுவதனையும் உயிர்க்குயிராக உள்ளிருந்தே இறைவர் அறிவாராதலின், எடுத்து அவரறிய மொழிவதற்கு ஒன்றுமில்லை என்ற குறிப்புமாம். பிழையுடன்பட்டு அறிவித்தவாறு; என் - வினா ஒன்றுமில்லை என எதிர்மறை குறித்தது, இறைஞ்சுதல் - அஞ்சலி கூப்பி வணங்குதல். |
|
|