பாடல் எண் :3441

பங்கயச்செங் கைத்தளிராற் பணிமலர்கொண் டர்ச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி பணிந்தசே வடிநினைந்து
பொங்கியவன் பொடுபரவிப் போற்றியவா ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார் மறைந்தவிடக் கண்கொடுத்தார்.
287

(இ-ள்.) பங்கயச் செங்கைத் தளிரால்...நினைந்து - தாமரைமலர் போன்ற செங்கைத்தளிர்களாலே குளிர்ச்சியுடைய மலர்களைத் தூவி அருச்சனை புரிந்துசெங்கயல் மீன்போன்ற கண்களையுடைய மலைவல்லியாகிய உமையம்மையார் பணிந்த திருவடிகளை நினைந்து; பொங்கிய....ஆரூரருக்கு - மேன்மேல் மிக்குஎழும் அன்பினோடு முன் கூறியவாறு பரவித் துதித்த நம்பியாரூரருக்கு; மங்கை...கொடுத்தார் - உமை மங்கை தழுவக்குழைந்த திருமேனியினையுடைய திருவே கம்பர் மறைந்த இடது கண்பார்வையினைக் கொடுத்தருளினார்.
(வி-ரை) பங்கயம்....பணிந்த சேவடி - அம்மையார் சிவபூசை செய்து பணிந்த திருவடிகள்; வரலாறு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் உரைக்கப்பட்டது.
பங்கயம் என்றது நிறமும் வடிவும், தளிர் - என்றது மென்மையுங் குறித்தன.
மலைவல்லி பணிந்த - மலையரசன் மகளாராகிய நிலையில் பணிந்த என்றது குறிப்பு; பணிந்தமை - உலகுயிர்கள் கண்டு அவ்வாறு தாமும் ஒழுகி உய்யும் பொருட்டாம்; தாம் ஈன்ற உயிர்களை நல்வழி காட்டி உய்விக்கும் கருணை என்பது.
அன்பொடு பரவிப் போற்றிய - முன் பாட்டிற் கூறியபடி துதித்து; பரவுதல் - குணங்களை எடுத்துக் கூறுதல்; பரவிப் போற்றுதலாவது பரவும் வகையினால் துதித்தல்; இப்பதிகம் கிடைத்திலது!
மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார் - குழைந்தாராதலின் எனக் காரணக் குறிப்புப்படக் கூறியபடி; இடப்பாகம் அம்மை கூறாகலின் அம்மையாரை முன் வணங்கி அருள்பெற்ற நிலையால் இடக்கண் கொடுத்தார் போலும்; "கண் அளித்து முலைச் சுவட்டுக் கோலந்தான் காட்டுதலும்"(3442) என்பது காண்க. "உமை நங்கை ஏத்திவழிபடப் பெற்ற" என்ற பதிகமும் பார்க்க. ஏனை வலக்கண் திருவாரூரிற் கொடுத்தருள நின்றமையும் காண்க.
குறிப்பு : - கண் மறைந்த இடம் திருவொற்றியூரும். இடக்கண் பெற்றது கச்சி ஏகம்பமும்; வலக்கண் பெற நின்றது திருவாரூருமாம். இவை மூன்றும் பிருதிவித் தலங்களாவன. "ஒடுங்கி(மலத்து) உளதாம்" என்றபடி யாது யாண்டு ஒடுங்கியது, அஃது ஆண்டுநின்றே மீள உளதாம் என்பது உண்மை; "முழுதும் அளித்து, அழித்து ஆக்கு முதல்வர்"(3439) என்ற குறிப்பும் காண்க. அன்றியும் மண் என்ற முதற்பூதத்தின் தன்மையே சிருட்டியாகிய தோற்றத்திற் குரியதாம் நிலையினையும் கருதுக.