பாடல் எண் :3454

கண்டவர்க ளதிசயிப்பக் கரையேறி யுடைபுனைந்து
மண்டுபெருங் காதலினாற் கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் "மின்னுமா மேக"மெனுஞ் சொற்பதிகம்
எண்டிசையு மறிந்துய்ய
வேழிசையா லெடுத்திசைத்தார்.
300

(இ-ள்) கண்டவர்கள் அதிசயிப்ப - கண்டவர்கள் அதிசயமடையும்படி; கரை ஏறி....அடைந்து - வடகுளத்தின் கரையினை ஏறி ஈரம்மாற்றி வேறு ஆடைபுனைந்து கொண்டு, மிகுந்த பெரிய காதலினாலே திருக்கோயிலினை வந்து சேர்ந்து; தொண்டர் எதிர் - தொண்டர்களுக் கெதிரில்; மின்னுமா மேகம் எனும் சொற்பதிகம் - மின்னுமா மேகம் என்று தொடங்கும் சொல் நிறைந்ததிருப்பதிகத்தினை; எண்திசையும்....எடுத்திசைத்தார் - எட்டுத் திக்குக்களில் உள்ளவர்களும் அறிந்து உய்யும்பொருட்டு ஏழிசைகளும் பொருந்த எடுத்துப் பாடியருளினார்.
(வி-ரை) கண்டவர்கள் அதிசயிப்ப - மூழ்குமுன் இருந்த நம்பிகளது திருமேனியிற் சார்ந்த பிணிப்பட்ட நிலையினையும், மூழ்கி எழுந்தவுடனே அது நீங்கி மணியொளி சேர் திருமேனியாயின நிலையினையும் நேரிற் கண்ட மக்கள் அந்தோ ஈது ஓர் அதிசயம் கண்டேம் என்று அதிசயம் கொள்ள; "அதிசயங் கண்டாமே" (திருவா).
உடைபுனைந்து - திருமாளிகையினை; வந்து - வடகுளத் தீர்த்தக் கரையினின்றும் கோயிலுக்கு வந்து.
தொண்டர் எதிர் - இப்பதிகம் கோயிலினுள் இறைவர் திருமுன்பன்றிக் கோயிலில் அங்குக் கூடியிருந்த திருத்தொண்டர்களெதிரே பாடியருளப்பட்டது; "என்னுடம் படும்பிணி யிடர்கெடுத் தானை....நான் மறக்குமாறு என்னை?" என்று பதிகத்துள் இறைவரைப் படர்க்கை யிடத்து வைத்துக் கூறும் வகையால் இப்பதிகம் தொண்டர்களின்முன் பாடியருளப் பட்ட தென்பது போதரும்; தொண்டர்களைத் தவிர ஏனை உலகர்களை முன்னிலைப் படுத்திப் பேசும் நிலை எந்தம் பெருமக்களிடம் நிகழா தென்பது; உலகரை வழிப்படுத்தி ஆணையிடும் நிலை வேறு.
எண்டிசையும் அறிந்துய்ய - "நான் பெற்ற இன்பம் பெறுகவிவ் வையகம்" (திருமந்) என்றபடி இவ்வருட் பெருமையினை அறிந்து உலக முய்யச் செய்தல் பதிகக்குறிப்பாகும். தம்பால் இறைவர் செய்த பேரருளை வியந்து போற்றும் வகையும் ஒரு குறிப்பாம்.
மின்னுமா மேகம் - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.