பாடல் எண் :3471

நின்ற நிலைமை யவர்கள்சிலர் நிலவு திருவா ரூரரெதிர்
சென்று மொழிவார்" திருவொற்றியூரினிகழ்ந்தசெய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங் குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப் பெற்றிலோ"மென் றிறைஞ்சினார்.
317
(இ-ள்) நின்ற....மொழிவார் - முன் கூறியவாறு புறத்தே நின்ற நிலைமையினை அப் பரிசனங்களுட் சிலர் நிலவும் நம்பியாரூரர்பால் சென்று அவர்க்கெதிரே சொல்வார்களாகி; "திருவொற்றியூரில்.....பெற்றலோம்" என்று - திருவொற்றியூரிலே நிகழ்ந்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றும் விடாது முழுமையும் அறிந்ததனாலே, அங்கு உள்ளவர்கள் புறம்பு தள்ளியமையால் இன்று திருமாளிகையின் புறத்திலேயும் சென்று சேரப் பெற்றோமில்லை" என்று கூறி; இறைஞ்சினார் - வணங்கினார்கள். (வி-ரை) இது - பரவையார் திருமாளிகையினுட் புகுதப் பெறாது புறம்பு நின்ற பரிசனங்களுட் சிலர் அச்செய்தியினை நம்பிகளிடம் அறிவித்தமை கூறுகின்றது. முன்பாட்டில் புகுதப் பெறாது புறநின்றார் - என்றதனை விரித்துரைத்தபடி.
நின்ற நிலைமை - மொழிவார் -என்று கூட்டுக. நிலைமை - நிலைமையினை; இரண்டனுருபு விரிக்க. நின்ற - திருமாளிகைப் புறத்தே நின்ற.
அவர்கள் சிலர் - அப் பரிசனங்களுட் சிலர்; இவ்வாறன்றி, நிலைமையவர்கள் என்று கூட்டி நிலைமை அடைந்த பரிசனங்கள் என்று உரைத்தனர் முன்னுரைகாரர்கள்.
நிலவு - அருள் வாழ்வின் நிலைபெற்ற என்க.
மொழிவார் - என்று - என்று கூட்டுக; மொழிவார் - மொழிவார்களாகி; முற்றெச்சம்; என்று - என்று கூறி.
செய்கை எலாம்....வகை - நிகழ்ச்சிகள் ஒன்றும் ஒழியாது எல்லாவற்றையும்.
அறிந்து - தள்ள - என்று கூட்டுக. அறிந்த காரணத்தினால் தள்ள; அறிந்து - காரணப்பொருளில் வந்த வினையெச்சம். உள்ளார் -அங்குள்ள மாதர்கள்.
தள்ள - பெற்றிலோம் - தள்ளியமையாலே; காரணங் குறித்தது. புறமும் - சிறப்பும்மை; இன்று மாளிகையின் புறமும் சென்றெய்த என்க; இன்று - முன்னெல்லாம் மாளிகையினுள் உரிமையாற் சென்ற நாங்கள் இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்பது, இன்று புறமும் - என்றவற்றின் குறிப்பு.
இறைஞ்சினார் - இதற்கு மாற்று நிகழ்த்தினன்றி மேற்செயல் ஒன்றும் நிகழ்தல் இயலாமைபற்றிய முறையீடு குறித்த வணக்கம்.