அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு வத்த யாமம் பணிமடங்கிப் பெருகு புவனஞ் சலிப்பின்றிப் பேயு முறங்கும் பிறங்கிருள்வாய் முருகு விரியு மலர்க்கொன்றை முடிமே லரவு மிளமதியுஞ் செருகு மொருவர் தோழர்தனி வருந்தி யிருந்து சிந்திப்பார், | 322 | (இ-ள்) அருகு....பிறங்கு இருள்வாய் - பக்கத்திற் சுற்றி யிருந்தவர்களும் துயின்று, திருவத்தயாம வழிபாடும் நிறைவேறிப், பெருகும் உலகத்தினுள்ளோர்களும் நடத்தல் ஒழிந்து, பேயும் துயிலும் மிக்க நள் இருளிலே; முருகு...தோழர் - மணம் வீசும் கொன்றை மலர்களைச் சூடிய சடைமுடிமேல் பாம்பினையும் இளம்பிறைச் சந்திரனையும் செருகும் ஒப்பற்ற இறைவரது தோழராகிய நம்பிகள்; தனி....சிந்திப்பார் - தனியே வருத்தத்துடன் இருந்து சிந்திப்பாராகி, (வி-ரை) அருகு சூழ்ந்தார் - (3466) தேவாசிரியன் மருங்கே அணைந்திருந்த நம்பிகளைச் சுற்றிச் சூழ்ந்திருந்த பரிசனங்களும் அன்பர்களும். திருஅத்தயாமம் பணிமடங்கி - திருஅத்தயாமம் என்னும் திருக்கோயில் வழிபாடும், அதற்கங்கமாக நிகழும் நாள் வழிபாட்டு முறைகளும் நிறைவாகிக் கோயில் திருக்காப்பிட்டு; மடங்குதல் - நிறைவேறி முடிவாதல். பெருகு புவனம் சலிப்பின்றி - பெருகு என்றது உலக வியாபாரங்களுட்பட்டு உயிர்கள் ஓயாமல் அலைந்து திரியும் நிலை குறித்தது; புவனம் - சரம் அசரம் என்ற இருவகை யுயிர்கள்; சலிப்பு - (சலனம்) அலைதல் - திரிதல் - அசைதல். பேயும் உறங்கும் பிறங்கு இருள் - பேய் - வாயு சரீரத்துடன் இருளிற் சஞ்சரித்துப் பிறவுயிர்களை அலைக்கும் உயிர்கள் அடையும் ஒருவகை நிலை;பேயும் - இரவில் இயங்கும் பேய்களும் இயங்காத நள்ளிரவு என உம்மை உயர்வு சிறப்பு. பிறங்கு இருள் - இருளுக்குப் பிறங்குதலாவது கூர்ந்த நிலையில் தன்னைக் காட்டி நிற்கும் நிலை. "ஒரு பொருளுங் காட்டா திருளுருவம் காட்டும்" (திருவருட்பயன் -23); "கருகு மையிரு ளின்கணம்" (454). முருகு...செருகும் - கொன்றைமுடி - உயர்வும், அரவுமிள மதியும் - தாழ்வும் குறித்தன; தாழ்வான பொருள்களை உயர்த்தும் கருணையினையும், அரவு மதியும் - பகைப் பொருள்களைப் பகைதீர்த்து உடன் வைக்கும் கருணையினையும் குறிப்பாலுணர்த்தின; "மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச் சோதியு மாயிருளாயி னார்க்கு" (திருவா) என்றும், "பாம்போடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்" (தேவா) என்றும் வரும் திருவாக்குக்கள் காண்க; ஈண்டு நம்பிகளது திருவுள்ளக் குறிப்பினை உட்கொண்டு கூறியவாறு. ஒருவர் - ஒப்பற்றவர்; "ஒன்றே பதி" என்றபடி ஒன்றாகிய பதி; "தானே தனிமன்றுட் டன்னந் தனி" (திருமந்). தனி வருந்தி யிருந்து - தனிமையாய் வருந்தி நின்று; ஒருவர் தோழர் தனி என்றது ஒருவரது தோழராந் தன்மைக் கேற்றபடி இருவரும் தனியாயினார் என்ற கவிநயமும் காண்க. சிந்திப்பார் - சிந்திப்பாராய்; முற்றெச்சம்; சிந்திப்பார் - நினைந்தார் என வரும் பாட்டுடன் முடியும்; சிந்தித்ததன் பயனாக நினைந்தார் என்க. |
|
|