பாடல் எண் :3491

ஞால முய்ய வெழுந்தருளு நம்பி தூதர் பாவையார்
கோல மணிமா ளிகைவாயில் குறுகு வார்முன் கூடத்தம்
பாலங் கணைந்தார் புறநிற்பப் பண்டே தம்மையர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவ ராகித் தனியே சென்றணைந்தார்.
337

(இ-ள்) ஞாலம்.....தூதர் - உலக முய்யும் பொருட்டு வந்தவதரித் தருளிய நம்பிகளது தூதராகிய இறைவர்; பரவையார்...குறுகுவார் - பரவையராது அழகிய மணிகள் அணிந்த திருமாளிகையின் வாயிலிற் சேர்வாராய்; முன்கூட....புறநிற்ப - முன்னரே தம்பாலின் அங்கு அணைந்தவர்கள் எல்லாரும் புறத்திலே நிற்கப்பணித்து; பண்டே....சென்றணைந்தார் - நீண்ட நாளாகத் தம்மை அருச்சனை புரியும் சீலம் உடைய சிவ வேதிய முனிவராகிய கோலத்துடன் தனியே சென்று சேர்ந்தனர்.
(வி-ரை) ஞால முய்ய எழுந்தருளு நம்பி - "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்" (35) என்று தொடக்கத்திற் கூறிய கருத்தை ஈண்டு நினைவு கூர்தற்பொருட்டு எடுத்துரைத்தவாறு; என்னை? ஞாலமுய்தற் பொருட்டுத் திருமலையில் நம்பிகளது காட்சி நிகழ, அதனால் "மாதர்மேன் மனம் வைத்தனை தென்புவி, மீது தோன்றியம் மெல்லியலாருடன், காத லின்பங் கலந்தணைவாய்" (37) என இறைவராணை நிகழ, அந்நியதியின்படி புவித்தோற்றம் நிகழ, அந்நிகழ்ச்சியினைக் கூட்டுவிக்கும் பொருட்டு இறைவர் தூதரா யெழுந்தருளினார் என்க. "செய்வினையும் செய்வானும் மதன் பயனும் சேர்ப்பானும்" (சாக் புரா.5) என்றபடி ஈண்டுச் செய்வினைப் பயன் கூட்டுவிப்பாராய் இரைவர் தூதரானார் என்பது குறிப்பு; இங்கு இத்தூதின் நிலை பற்றி உண்மையறிய லாற்றாது குறை கூறப் புகுவோர், நம்பிகளது சரிதம் பற்றிய இந்நிகழ்ச்சியேயன்றி உலகில் எல்லா உயிர்களின் எல்லா வினைப்பயன்களையும் இடை நின்று கூட்டுவிப்பவர் இறைவரேயாம் என்ற உண்மை நிலையைக் கருதித் தெளியக்கடவர்.
முன்கூட....புறநிற்ப - கணங்கள் - தேவர் - முனிவர் முதலியோர்கள் திருமாளிகையின் புறத்தே திருவீதியளவில் நின்றுவிட; இதுபற்றியே முன் "ஒரு வீதியிலே சிவலோக முழுதும் காண" என்றார். முன்கூட - அணைந்தார் - முன்னே சென்றவர்கள்.
பண்டே....தனியே சென்று அணைந்தார் - பண்டே - நீண்ட காலமாக; வயது முதிர்ந்த; சீலம் - தவவொழுக்கம்; தனியே - உடன் வந்தவர்களின்றி; "நீடிய பேதையா ளுடனின்றி’ (447) என்ற கருத்தும் ஈண்டு வைத்துக் கருதத்தக்கது; பின்னர்த்"தாமாந் தன்மை யறிவுறு கோலத் தோடும்"(3515) என்பதனை இங்கு வைத்து ஒப்பு நோக்குக.
தனியே - "மாதரார் தாமிருந்த, இடவகையிற் றனிபுகுதோம்" (3697) என்ற நிலையினையுடையராய்த் தம்மைக் காட்டி நடிக்கும் பிரானார் இங்குப் பரவையார் தனியிருந்த திருமாளிகையில், பாதியிரவில் அதற்கு மாறாகத் தனியே புகுந்தாரே? எனின், பண்டே தம்மை அர்ச்சிக்கும் மறை முனிவர் கோலமும் சீலமுடைமையும் அவ்வொழுக்கத்தினை இகவாமற் காத்தன என்பது குறிக்க இவற்றை முன் கூறிக் காட்டிய நயம் காண்க.
ஆகி - ஆக்கச் சொல் உருவமாறுதலை மேற்கொள்ளுதல் குறித்தது. ஆக்கிக் கொண்டு இவ்வாறு அருளினாலே நினைந்தவாறே நினைந்த மேனி கொள்ளுதல் இறைவரியல்பென்க. (சித்.1-45; சிவப்.15).
மறைமுனிவராகித் தனியே சென்று அணைந்தார் - இவ்வாறு ஒருமுறைக் கிருமுறை தூது செல்லுதலும், முதலில் மறை முனிவராகித் தனியே செல்லுதலும், பின்னர்த் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு செல்லுதலும் முதலிய செயல்கள் இறைமைத் தன்மையோடு இயைவனவோ? இவற்றின் தன்மை என்னை? எனின், இவை, உயிர்கள் வினைப்பயன்களைத் துய்த்து ஈடேறச் செய்தற்கண் முன்னவன் செய்யும் அருள் விளையாட்டுக்களேயா மென்க; இவற்றின் காரணமும் நிகழ்ச்சி முறையும் நம்மாற் காண முடியாது; ஆதலிற் கேட்டலுமாகாது என்பது இறைவனாணையாம். உயிர்கள் வினைத்திறத்தாற் பலதிறப்படுவன; ஆதலின் அவ்வவர்க்குச் செய்யும் அருளின் வண்ணமும் பலபல ஆவன; "ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட்பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" (திருப்பாசுரம்) என்ற ஆணையும், அதற்கு, "அருளும் திறம், நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால், ஓது மெல்லை யுலப்பில வாதலின், யாது மாராய்ச்சி யில்லையாம்" (2731) என்ற ஆசிரியரது விளக்கமும் கண்டு உளங்கொள்ளத் தக்கன.