பாடல் எண் :3520

துளிவளர் கண்ணீர் வாரத் தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
"ஒளிவளர் செய்ய பாதம் வருந்தவோ ரிரவு மாறா
தளிவரு மன்பர்க் காக வங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு
மானா லென்செய்கே னிசையா" தென்றார்.
366

(இ-ள்) துளிவளர்.........விண்ணப்பஞ் செய்வார் - துளிகளாக வந்து பெருகும் கண்ணீர் வழியத் தொழுது விண்ணப்பஞ் செய்வாராகி; ஒளிவளர்....வருந்த - ஒளி வளர்தற் கேதுவாகிய செம்மை தருகின்ற திருவடிகள் நோவ; ஓர் இரவு - ஒர் இராத்திரி முழுதும்; மாறாது - மாறுதலில்லாது; அளிவரும் அன்பர்க்காக - நிலைபெற்ற அன்பினை உடைய அடியவர் பொருட்டு, அங்கொடிங்கு....எளிவருவீருமானால் - அங்கும் இங்குமாக அலைவீராகி எளிதாக எழுந்தருளுவீருமானால்; என்...என்றார் - இசைவுபடாது வேறென் செய்ய வல்லேன் என்று சொன்னார்.
(வி-ரை) துளிவளர் கண்ணீர் வார - துளிகளாக முன்னர்த் தோன்றிப் பின் ஊற்றுப் போலத் தொடர்ந்து பெருகிக் கண்ணீர் வழிய.
ஒளிவளர் செய்ய பாதம் - அடியார்கள்பால் சிவஞான ஒளி பெருகச் செம்மைதரும் திருவடி; "ஒளிவளர் விளக்கே" (திருவிசைப்பா).
ஓர் இரவு - இரவு முழுமையும் என முற்றும்மை தொக்கது; ஓர் - ஒப்பற்ற என்ற குறிப்பும் காண்க.
மாறாது அளிவரும் அன்பர் - நம்பிகள்; அளி - இறைவர்பால் வைத்த உள்ளூறிய அன்பு;" அளிவள ருள்ளத் தானந்தக் கனியே" (திருவிசைப்பா); மாறாது - இடையறாது; "ஆரூரானை மறக்கலுமாமே" "மாணிக்கத் தைமறந் தென்னினைக் கேனே" "எனக்கார் துணை நீயலதே" "உன்னையல்லா லினி யாரை நினைக்கேனே" "காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலும் கருதி, நானே லும்மடி பாடுத லொழியேன்" "எங்ஙனநான் பிரிந்திருக்கே னென்னாரு ரிறை வனையே" "எழுபிறப்பும் மெங்கணம்பி கண்டாயே" "எனையஞ்ச வென்றருளா யாருறவெனக்கு" "என்னை நான் மறக்குமா றெம்பெருமானை" என்றற்றொடக்கத்த எண்ணிறந்த திருவாக்குக்கள் நம்பிகளது திருவுள்ளத்தின் மாறாத அளிவரும் அன்புடைமையினை விளக்குதல் காண்க. இவ்வாறன்றி, மாறாது என்பதனை "ஓர் இரவும் மாறாது" என்று கூட்டி ஓர் இரவு முழுமையும் இடைவிடாது என்றுரைப்பினும் அமையும். "அங்கொடிங்கு உழல்வீராகி எளிவருவீருமானால் என்பது இக்கருத்துப்பட நின்றதும் காண்க. மாறாமை - மனம் மாறுபடாமையுமாம்.அங்கொடிங்கு உழல்வீராகி - அங்கு - நம்பிகள் இருக்கும் இடம், தேவாசிரியன் மருங்கு (3466).
இங்கு - பரவையார்தம் திருமாளிகை; உழலுதல் - ஒருமுறைக் கிருமுறை அடி வருந்த நடத்தல்; மறுத்து வலிந்து போக்கிய பின்னரும் சார்தல் என்றதும் குறிப்பு.
எளிவருவீரும் - அரியாராகிய நீர் எளியராக வருவீராகி; ஏவலாள் போல அலைவீருமாகி.
எளிவருவீரும் - உம்மை உழல்வீராதலின்றியும் என இறந்தது தழுவியது.
அன்பர்க்காக எளிவருவீருமானால்என் செய்கேன் இசையாது - தேவரீர் உழன்று எளிவருதல் கருதி அதன் பொருட்டு இசைகின்றேன் என்பது; அன்பர்க்காக, அரியவராகிய தேவரீர் எளியராய் வரும்போது அவர்க்காக அடியேன் இசைதலே தகுதி என்றதுமாம்; இசையாது என் செய்கேன் என்க. சொல் வைப்பு முறை மாறியதும், எதிர் மறைகளும் உறுதியும் விரைவும் மனந்தடுமாறி நிலைநின்ற அமைதியும் குறித்தன.