பாடல் எண் :3531

மாலைதண் கலவைச் சேறு மான்மதச் சாந்து பொங்குங்
கோலநற் பசுங்கற் பூரங் குங்கும முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலள பிறவு மேந்தும் பரிசன முன்பு செல்ல,
377

(இ-ள்) மாலை.....முதலாயுள்ள - மாலையும், குளிர்ச்சியுடைய கலவைக் குழம்பும், கத்தூரி கலந்த சந்தனமும், மிக்க அழகிய நல்ல பச்சைக் கற்பூரமும், குங்குமமும் முதலாக உள்ள; சாலும்....செல்ல - திருமேனியிற் பொருந்தும் அணிகளும், ஒருங்கே தரிக்கும் பூணாடை வகைகளும், தகுதியுடைய பிறவும் ஆகிய இவற்றைத் (ஏந்தும்....செல்ல -) தாங்கிவரும் பரிசனங்கள் முன்னே போக,
(வி-ரை) கலவைச் சேறு - வாசனைப்பண்டம் சேர்த்துக் கலந்த குழம்பு. மான்மதச் சாந்து - கத்தூரியுடன் கூட்டிய சந்தனம்.
மெய்க்கலன்கள் - மெய்யில் அணிவன; மெய்ப்பூச்சும் அணிகளும்.
ஆடைவர்க்கம் - உடைவகை; ஆரவர்க்கம் என்பது பாடமாயின் முத்தாரம் முதலியன என்க. முன்னர் மாலை என்றது மலர்மாலைகளை.
பாலன - இவ்வகையைச் சார்ந்தன; பிறவும் - தாம்பூலம் பழம் முதலியவை.
இவை முன்னமே பரவையார் மாளிகையில் செல்வதற்கு நம்பிகள் கொணர்ந்தவை. ஏந்தும் - ஏந்திச் செல்லும்.
பரிசனம் முன்பு செல்ல - பரிசனம் - முன்னர் நம்பிகளுடன் வந்தாரும், அன்று திருவாரூரில் அப்போது சேர்ந்தாரும், இவர்களுள் ஒரு கூனனும் ஒரு குருடனும் சார்ந்தமையும், அவ்வாறு சார்ந்து மாலை - தாம்பூலங்களை ஏந்திச் செல்லப் பெற்ற பேற்றினால் முறையே நம்பிகள் திருவருளால் கூன் நீங்கப்பெற்றும், கண் விழிக்கப்பெற்றும் நலம் பெற்றமையும் வரலாறுகளாம். இவை "திருவாரூரன் பொன்முடிமேல், ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக், கோற்றொதது கூனனுங் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை, சாற்றித் திரியும் பழமொழி யாமித் தரணியிலே" (திருவந்தாதி - 48) என்றும், இதனைச் "சடையார் தூதுதருந் திருநாட்கூனுங் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம், யானும் பரவித் தீர்க்கின்றே னேழு பிறப்பின் முடங்குகூன்" (3938 - கூற்றுவர் புரா - 9) என்றும் உரைத்தருளியவாற்றால் அறியப்படும்.
பாலினம் -என்பதும் பாடம்.