பாடல் எண் :3546

"எம்பிரா! னெந்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாந்
தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென வாண்டு கொண்டா னொருவனே தீர்ப்பான் வந்து!"
342

(இ-ள்) எம்பிரான்! - எமது பெருமானே!; எந்தை தந்தை.... என்னை - எனது தந்தையும் அவர் தந்தையும் மேலும் அவர் தந்தையும் எமது கூட்ட முழுவதும் எங்களைக் காக்கும் பெருமானார் தேவரீரே என்று வழிவழியாகத் தேவரீரது திருவடிச் சார்புபற்றியே வாழ்ந்து வருகின்ற இவ்வுலகிற் பெருகிய வாழ்க்கையினையுடைய இத்தன்மையனாகிய என்னை; நின்று.....வந்து - பெருகி நின்று வருத்தும் சூலையினை வம்பாகத் தேவரீரால் ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனே வந்து தீர்ப்பவன்?
(வி-ரை) எம்பிரான் - எமது பெருமானே!; விளி முன்கூறியபடி முன்னின்று மொழிந்த இறைவரை நோக்கிக் கூறியது.
எந்தை.....வழிவழிச் சார்ந்து வாழும் - என் தந்தையும், அவர் தந்தையும், தந்தை இன்னும் இருமரபும் பற்றிய எல்லாரும் என்க. வழிவழிச் சார்ந்து வழி வழியாகத் தொடர்பு விடாமற் சிவச்சார்பு பூண்டு. நீரே ஏகாரம் தேற்றம்; பிரி நிலையுமாம்.
கூட்டம் - குலம் - குடும்பம்.
வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை அதுபற்றி வாழ்ந்து வருவதனால் உலகில் சிறக்க நிகழும் வாழ்க்கை; "மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையரார்" (1915) என்றும், "மறிவளருங் கையார் பாதம், பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்" (2210) என்றும், இவ்வாறு வருவன பலவும் காண்க. இவ்வாறு எண்ணும் திரமும் தகுதியும் விளங்கப் பெருமை கொள்ளுதலே அன்பின்றிறமாய் ஒருவனைச் சிவனடிச் செலுத்தி உய்விக்க வல்லது; இவ்வெண்ணங்கள் தாமும் இந்நாள் மக்களுள் மறைந்து வருதல் வருந்தத் தக்கது.
என்னை பெருமிதம் படக்கூடிய திறம். தம்பிரான் - தங்கட்குக் கடவுள்;
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே - கூட்டமெல்லாம் வழிவழிச் சார்புடன் வாழ்ந்து வரும் என்நோயினை அவ்வாறன்றி இன்று புதிதாகவும் வலிந்தும் ஆட்கொள்ளப்பட்ட ஒருவனோ வந்து தீர்ப்பவன்; தீர்ப்பது தகுதியாமா? ஆகாது, என ஓகாரவினா எதிர்மறைப் பொருள் தந்தது.
வம்பு - எவரும் செய்யாத புதுமை; வல்வழக்கு என்ற குறிப்பும் தருவது; ஒருவனே இகழ்ச்சிக் குறிப்புப்பட நின்றது. ஏ - வினா;
கொண்டான் - கொள்ளப்பட்டான்; செயப்பாட்டு வினை.