கணவர்தஞ் செய்கை தன்னைக் கரந்து"கா வலரை நம்பி அணைவுறும் பொழுது சால வலங்கரித் தெதிர்போ" மென்னப் புணர்நிலை வாயிற் றீபம் பூரண கும்பம் வைத்துத் துணர்மலர் மாலை தூக்கித் தொழுதெதிர் கொள்ளச் சென்றார். | 399 | (இ-ள்) காவலரை - காவலாளர்களை நோக்கி; கணவர்....கரந்து - கணவனாரது செயலினை மறைத்து; நம்பி....என்ன - நம்பிகள் இங்கு அணையும் போது திருமனையை மிகவும் அலங்காரஞ் செய்து எதிர் சென்று நல்வரவேற்று அழையுங்கள் என்று ஏவியிட; புணர்நிலை;....சென்றார் - (அதுகேட்ட அப்பரிசன மாந்தர்களும்) செறிந்த நிலையினையுடைய வாயிலில் விளக்கும் நிறைகுடமும் வைத்து கொத்துக்களையுடைய மலர்மாலைகளையும் தொங்கவிட்டு வணங்கி எதிர் கொள்ளச் சென்றார்கள். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து - கரத்தல் - இச்செய்கை நிகழ்ந்ததனை வெளியிற் புலப்படுத்தாது மறைத்தல்; அழுகையை ஒழிதல் மந்திரமன்றி வேறு சொற்களாலேனும், அந் நிகழ்ச்சியைக் குறிக்கும் பிற குறிப்புக்களாலேனும் பிறரறியாமல் வைத்தல். கணவர்தம் செய்கை - தம் - தாமே செய்துகொண்ட; செய்கை - உயிரினை மாய்த்துக் கொண்டமை. காவலர் - சுற்றத்தார் - இக்காவலாளர் - பணியாளர்; நோக்க என வருவித்துக் காவலரை நோக்கி - என்ன என்க; சால அலங்கரித்து - திருமனையினை என்பது இசை எச்சம்; அலங்கரித்தல் - மேற் கூறப்படுவது; இது பெரியோரை வரவேற்கும் நிலையாகிய மரபு. காவலர் கணவனார் என்று கொண்டு, அவரை நம்பி காண அணைவுறும் பொழுது என்றுரைக்கவும் நின்றது; இப்பொருளில், முன்வந்த பரிசனங்களை நோக்கி என்பதை முன்பாட்டினின்றும் வருவிக்க. காதலரை நம்பி என்று பாடம் கொண்டு காதலர் - விருப்ப முடையோர் சிலரை என்றுரைத்தார் முன் உரைகாரர், இதன் பொருத்தம் ஆராயத்தக்கது. என்ன என்று ஆணையிட்டு ஏவ; முன் "ஒருவரும அழுதல் செய்யா தொழிக" என்றது ஒரு கூற்று; இங்கு "நம்பி....போம்" என்றது அதனின் மேம்பாடாகிய மற்றொரு கூற்று; இவ்வேறுபாடு குறிக்க, இதனைப் பின்னும் - என்ன என வேறு பிரித்துக் கூறினமையுடன், வேறு பாட்டினாலும் கூறியருளினார்; "கணவரோடு போவது புரியும்" (3552) என்றது கற்புநிலை; மேல், இங்குக் கூறிய சிவன் அடியவர்களை உபசரிக்கும் நிலை வேறு. இது சிவபுண்ணியமாம். முன்னையது புண்ணியலோகப் பயனும் பின்னையது சிவலோகப் பயனாகிய வீடுபேறும் தரவல்லன; ஆதலின் துறந்து கணவரோடு உடன்போவதற் கொருப்பட்ட அம்மையார், அதனைத் தவிர்த்து உயிர் தாங்கிச் சிவனடியாரை யுபசரித்து வரவேற்றலை விரும்பிச் செய்தனர். இது செயற்கரிய பெருஞ்செயல் என்பது தேற்றம். இவ்வம்மையார் மானக்கஞ்சாற நாயனாரது திருமகளார்; மணநாளன்று தம் கூந்தலை அரிந்து மாவிரதியார் விரும்பியவாறே கொடுக்க நின்ற அதன் மூலம் திருவருள் வெளிப்பாட்டுக்குத் துணைக் காரணமாய் விளங்கினர்; இளம்போதில் இத்தன்மை வாய்ந்த இவர் இங்கும் அவ்வாறே அடியார் பணிசெய்து மேலும் அருள் வெளிப்பாட்டுக்குத் துணைநின்ற தன்மை காண்க, முன்பு அங்கு அடியில் அரிந்த கூந்தல் அருளால் பின்னை அன்றே புனைந்தமலர்க் குழலாய் (901) வளரப்பெற்றது; இங்கும் அவ்வாறே உயிர்நீத்த கணவனார் அன்றே அருளால் உயிர் பெற்றெழுந்து கேளிரேயாகி எழுவதும் பெறநின்றனர்; திருவருளின் பண்புபெற்ற இவ்வம்மையாரின் பெண்மைப் பெருநலம் கண்டு ஒழுகி உய்தி பெறுவாராயின் உலகம் இன்புற்று ஓங்கி உய்திபெறும். தீபம் - கும்பம் - மாலை - மங்கலப் பொருள்கள்; இவற்றால் வாயில் அலங்கரித்துப் பெரியாரை எதிர் கொள்ளுதல் மரபு. தீபம்....தூக்கி - திருவாரூரினின்றும் திருப்பெரு மங்கலத்துக்கு நம்பிகள் வந்து சாரும் கால இடையில் இவர்கள் இது செய்யலாயினர் என்க. சென்றார் - அம்மையாரால் ஏவப்பெற்ற நாவல்களாகிய நன் மாந்தர் முதலியோர்; இவர்களைச் "செம்மை சேர் சிந்தை மாந்தர்" என்று மேல் வரும்பாட்டிற் சிறப்பித்தல் காண்க. |
|
|