செம்மைசேர் சிந்தை மாந்தர் சென்றெதிர் கொண்டு போற்ற நம்மையா ளுடைய நம்பி நகைமுக மவர்க்கு நல்கி மெய்ம்மையாம் விருப்பி னோடு மேவியுட் புகுந்து மிக்க மொய்ம்மலர்த் தவிசின் மீது முகமலர்ந் திருந்த போது, | 400 | (இ-ள்) செம்மைசேர்....போற்ற - செம்மை பொருந்திய சிந்தையினை உடைய மாந்தர்கள் போய் எதிர்கொண்டு வரவேற்றுத் துதித்து வணங்க; நம்மை....நல்கி - நம்மை ஆளுடைய நம்பிகள் அவர்க்கு இன்முகம் அளித்து; மெய்ம்மையாம்....போது - உண்மை ஆகும் விருப்பத்தினோடும் பொருந்தித் திருமனையினுள்ளே புகுந்து மிகுதியாகப் பரப்பிய மலராசனத்தின் மேல் முகமலர்ச்சியுடனே வீற்றிருந்த பொழுது. (வி-ரை) செம்மை சேர் சிந்தை மாந்தர் - முன்பாட்டில் அம்மையாரால் "அலங்கரித்து எதிர்போம்" என்று ஏவப்பெற்ற பரிசனங்கள், சுற்றுத்தார், முதலாயினோர்; செம்மை - செப்பமுடைய நிலை; ஈண்டுச் செம்மையாவது தமது தலைவர் இவ்வாறு உயிர் நீத்ததனால் நேர்ந்த தமது துன்பம் ஒரு சிறிதும் புறந்தோற்றாதவாறு மனையலங்கரித்தலும், தமது சொல் செயல் முகக்குறி முதலியவற்றாலும் பிறர்க்குத் தெரியாதவாறும் தமது தலைவியாராகிய அம்மையார் ஏவலுள் அடங்கி ஒழுகுதல். இனிச், செம்மைசேர் - செம்மை நிலையினை நம்பிகளருளாலும் இறைவரருளாலும் சாரவுள்ள என்ற குறிப்புமாம். நம்பிகளை இந்நிலையில் எதிர்சென்று வரவேற்கும் பேறு பெற்ற செம்மையும் குறித்தது. அடியார்களை வழிபடும் வழிவந்தவர் என்பதும் குறிப்பு. போற்ற - வந்தித்து வணங்கி யழைக்க. நம்மை ஆளுடைய நம்பி - ஆளுடைய நம்பி என்ற தொடருக்குப் பொருள் குறித்தவாறு; ஈண்டு இவ்வாற்றாற் கூறியது சிவனடிமைப் பண்பிற்பிறழாத நிலையினைத் தம் ஒழுக்கத்தால் உலகுக்கு அறிவுறுத்தி வழிப்படுத்தும் தன்மைகுறித்தற்கு.இவ்வாறே முன், "நந்தமை யாளுமோர் காவலர்" என்று ஒப்பக் கூறியது நோக்கற்பாலது. அவர்க்கு நகை முகம் நல்கி என்க, அவர் - எதிர்கொள்ள வந்த மாந்தர்; நகை முகம் நல்குதல் - வரவேற்பை ஏற்று மகிழ்ச்சிக் குறியாக இன்முகம் காட்டுதல். நகையோடு கூடிய முகமலர்ச்சியைக் காட்டி; மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை. மெய்ம்மையாம் விருப்பினோடு மேவி - மெய்யடிமைத் திறமே பற்றி உளதாகிக் கலிக்காமனாரது நட்பினை விரும்பும் மனநிலை பொருந்தி;ஆம் - ஆக்கச்சொல் இந்நிலை இனி உண்மையேயாகி நிறைவுறும் என்ற குறிப்புப்பட நின்றது; ஆதல் - விளைதல். தவிசு - நம்பிகளுக்கென்று அமைந்த ஆசனம். |
|
|